தமிழகத்தில் ஒன்றியம்னா கண்டிக்கிறீங்க.. புதுச்சேரியில் அமைதியா இருக்கீங்க.. பாஜக மீது இந்து இயக்கம் அட்டாக்.!
‘இந்திய ஒன்றியம்’ என்ற அழைப்பதில் இரட்டை வேடம் போடும் தமிழக பாஜக இதுதொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் விமர்சித்துள்ளார்.
தமிழக அரசு, முதல்வர், அமைச்சர்கள், திமுகவினர் எல்லோரும் மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்றே அழைக்கிறார்கள். இதற்கு பாஜக, புதிய தமிழகம், இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. இந்நிலையில் புதுச்சேரியில் நடந்த அமைச்சரவை பதவியேற்பு விழாவில், ‘இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஆட்சி பரப்பின் அமைச்சர்’ என்று சொல்லி ஆளுநர் தமிழிசை பதவி பிரமாணம் செய்துவைத்தார். இதனால், பாஜகவுக்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பாஜகவை விமர்சித்து இந்து தமிழர் கட்சித் தலைவர் ராம ரவிக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “புதுச்சேரி அமைச்சரவை பதவியேற்றபோது இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஆட்சி பரப்பின் அமைச்சர் என்ற வகையில் என் கடமைகளை உண்மையாகவும் மனச்சான்றின்படியும் ஆற்றுவேன்' என ஆளுநர் தமிழிசை வாசித்ததை, அமைச்சர்கள் திரும்பக் கூறி பதவியேற்றுள்ளனர். தமிழகத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்றபோது கண்டனம் தெரிவித்தவர்கள், இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்?
‘ஒன்றியம்’ என்ற சொல்லாடலை எதிர்க்கிறோம்; இது, கண்டனத்திற்குரியது. ஆனால், இந்த சொல்லுக்கு மாநிலத்திற்கு மாநிலம் அர்த்தம் மாறுபடுமா என்பதை பாஜகவினர் சொல்ல வேண்டும். மாநிலத்திற்கு மாநிலம் கொள்கைகளை மாற்றிக் கொள்ளும், தேசிய கட்சிகளின் இரட்டை வேடத்தை புரிந்து கொள்ள முடிகிறது. தமிழக பாஜக தலைவர்கள் இதற்கு என்ன விளக்கம் தருவர். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே.” என்று ராம ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.