நபிகள் நாயகம் மற்றும் மோசசின் பத்து கட்டளைகளுடன் ரஜினியின் ரசிகர் மன்ற விதிகளை ஒப்பிட்டு பேசிய நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் மற்றும் மோசசின் பத்து கட்டளைகளுடன் ரஜினியின் ரசிகர் மன்ற விதிகளை ஒப்பிட்டு பேசிய நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு கிண்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் சீமான் மரியாதை செலுத்தினார். இதன் பிறகு செய்தியாளர்களை சீமான் சந்தித்தார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அப்போது அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கூட ரஜினி தனது ரசிகர் மன்றத்திற்கு நிர்வாகிகளை நியமித்து வருவது குறித்து செய்தியாளர்கள் சீமானிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு தனது பொழுதுபோக்கிற்காகவே ரஜினி வெளிநாடுகளில் நிர்வாகிகளை நியமிப்பதாக சீமான் கூறியிருந்தார். மேலும் திடீரென தூங்கி எழும் ரஜினி நபிகள் நாயகம், மோசஸ் போன்று பத்து கட்டளைகளை வெளியிடுவதாகவும், அதனை தூக்கிக் கொண்டு ஊடகங்களும் பெரிதுபடுத்துவதாக அங்கலாய்த்திருந்தார். 

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது. இந்த நிலையில் தமிழ்நாடு இஸ்லாமிய ஜமாத் எனும் அமைப்பினர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர். மேலும் அவர்கள் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்று இஸ்லாமியர்களின் உயிரினும் மேலான நபிகள் நாயகத்தை நடிகர் ரஜினியுடன் ஒப்பிட்டு சீமான் பேசியது தங்கள் மனதை புண்படுத்திவிட்டதாக புகார் அளித்தனர்.

அத்துடன் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இஸ்லாமிய ஜமாத் காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில் கேட்டுக் கொண்டது. இதே போன்று கிறிஸ்தவ மக்கள் கட்சியினரும் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்து சீமானுக்கு எதிராக புகார் மனு அளித்துள்ளனர். அந்த புகாரில் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த போதகர் மோசசையும் ரஜினியுடன் ஒப்பிட்டு சீமான் அவமதிப்பு செய்துள்ளதாக கூறியுள்ளனர். சீமான் மீது ஒரே நேரத்தில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் புகார் அளித்துள்ளதால் வழக்கு பதிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.