சிறுசிறு பிரச்சனைகளைகூட பாஜக பெரிதாக்கி  மத கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது. தமிழகத்தில் காவி கலாச்சாரத்தை புகுத்த முயற்சிக்கிறது, கோவில் திருவிழாக்களில் ஆர்எஸ்எஸ் கொடிகளை  கட்டி  விழா நடத்துவது போல அவர்கள் மக்களிடம் தங்களது கொள்கையை புகுத்த முயற்சிக்கின்றனர். 

பாஜகவின் சூழ்ச்சியை முறியடிக்க இனிமேல் கம்யூனிஸ்ட் கட்சியும் கோவில் திருவிழாக்களில் பங்கெடுக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவில் திருவிழாக்களில் ஆர்எஸ்எஸ் கொடியை கட்டி அவர்கள் விழா நடத்துவது போல தங்களது கொள்கையை நுழைகிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் அரசியல் ரீதியாக பாஜகவை கம்யூனிஸ்ட் கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. மத்திய பாஜக கொண்டு வரும் ஒவ்வொரு திட்டத்தையும் விமர்சிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அதற்கு எதிராக போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இஸ்லாமியர்களை குறிவைத்து பாஜக செயல்படுவதாகவும் சிஏஏ சட்டம், மாட்டு இறைச்சிக்கு தடை, ஹிஜாப் அணிய தடை, முத்தலாக் சட்டம் என அடுத்தடுத்து இஸ்லாமில் குறி வைக்கப்பட்டு வருவதாகவும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவை மிக கடுமையாக விமர்சித்து வருகின்றன. தமிழகத்திலும் பாஜக கால்பதிக்க முயற்சி எடுத்து வரும் நிலையில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அரசுக்கு எதிரான பிரச்சாரத்தை கம்யூனிஸ்ட்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை கம்யூனிஸ்ட் கட்சியின் 21 வது மாநில மாநாடு வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் நேற்று மதுரையில் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:- ஒன்றிய பாஜக அரசு கற்பனை செய்ய முடியாத அளவிற்கு நாட்டின் பன்முகத்தன்மையை சீரழித்து வருகிறது. தமிழக ஆளுநர் பல்கலைக் கழக துணைவேந்தராக இருக்கக்கூடாது, துணைவேந்தர்கள் நியமனம் செய்யும் அதிகாரத்தை அவரிடமிருந்து ரத்து செய்ய வேண்டும். அதற்கான சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும், ஒரே நாடு ஒரே கலாச்சாரத்தை பாஜக திணிக்க முயற்சி செய்கிறது. நாட்டின் பன்முகத் தன்மைக்கு பேராபத்து. பாஜகவுக்கு எதிராக தமிழக மக்களைத் திரட்ட வேண்டும்.

சிறுசிறு பிரச்சனைகளைகூட பாஜக பெரிதாக்கி மத கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது. தமிழகத்தில் காவி கலாச்சாரத்தை புகுத்த முயற்சிக்கிறது, கோவில் திருவிழாக்களில் ஆர்எஸ்எஸ் கொடிகளை கட்டி விழா நடத்துவது போல அவர்கள் மக்களிடம் தங்களது கொள்கையை புகுத்த முயற்சிக்கின்றனர். பாஜகவின் சூழ்ச்சியை முறியடிக்க இனி கம்யூனிஸ்ட் கட்சிகளும் கோவில் திருவிழாக்களில் பங்கேற்கும், திமுகவோடு கைகோர்த்து பாஜகவை கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கும் என்றார். உத்தரபிரதேச மாநில தேர்தலுக்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்த பெட்ரோல் டீசல் விலை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது, தமிழகத்தில் ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் கொண்டு வரவேண்டும், இலங்கையின் பொருளாதாரம் திவால் நிலைக்கு சென்றுவிட்டது, இந்தியாவிலும் இதே நிலை உருவாக வாய்ப்புள்ளது என அவர் எச்சரித்தார்.