கோயம்பேடு உணவு தானிய வணிக வளாகத்திற்கு வ.உ.சி பெயரை சூட்ட வேண்டும்... கோயம்பேடு வணிகர் சங்கம் கோரிக்கை..!
தமிழர்களின் வணிக பெருமையை இந்திய வரலாற்றில் பதிவு செய்த கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. அவர்களின் பெயரை கோயம்பேடு உணவு தானிய வணிக வளாகத்திற்குச் சூட்ட புதிய அரசு ஆவன செய்யும்படி வேண்டுகிறோம்.
வ.உ.சி. அவர்களின் பெயரை கோயம்பேடு உணவு தானிய வணிக வளாகத்திற்குச் சூட்ட புதிய அரசு ஆவன செய்ய வேண்டும் என கோயம்பேடு உணவு தானிய வணிகர் சங்க தலைவர் த.மணிவண்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’உதித்திருக்கும் புதிய அரசுக்கும், மாண்புமிகு தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், புதிய அமைச்சரவைக்கும், கோயம்பேடு வணிகர்களின் குரலுக்கும் கோரிக்கைகளுக்கும் மதிப்பளிக்க முன்வந்திருக்கும் வீட்டு வசதித்துறை அமைச்சருக்கும் நல்வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது கோயம்பேடு உணவு தானிய வணிகர் சங்கம். கோயம்பேடு உணவு தானிய வணிகர்கள் சார்பாக சில நியாயமான கோரிக்கைகளையும் தங்கள் பரிசீலணைக்காக முன் வைக்க விரும்புகிறோம்.
காய்கறி அங்காடி வளாகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் அப்படியே உணவு தானிய வணிக வளாகத்திற்கும் வந்து கொள்முதல் செய்ய ஏதுவாக காலை 3 மணி முதல் உணவு தானிய வணிக வளாகம் இயங்க அனுமதிக்கும்படி வேண்டுகிறோம்.
குறிப்பிட்ட பொருளை குறிப்பிடப்பட்டிருக்கும் வளாகத்திற்குள் தான் விற்பனை செய்ய வேண்டும் என்ற Tamil Nadu Specified Commodities Market Act சட்டத்திற்கு கட்டுப்படாமல், காய்கறி மற்றும் கனி அங்காடி வளாகங்களுக்குள் சட்டவிரோதமாக இயங்கும் உணவு தானிய வியாபாரத்தினை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
கட்டி முடிக்கப்பட்டு இன்னும் திறக்கப்படாத உணவு தானிய கிடங்கினை தமிழக அரசே நடத்தும் முடிவெடுத்து, உடனடியாக அதனை உபயோகத்திற்கு கொண்டுவர வேண்டுகிறோம். உணவு தானிய வணிக வளாகத்திற்குள் இருக்கும் வாகனங்கள் நிறுத்துமிடத்தை உணவு தானிய வணிகர்கள் மற்றும் வளாகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்க வேண்டுகிறோம்.
உணவு தானிய வணிக வளாகத்தின் அத்தியாவசியப் பிரச்னையான, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத தண்ணீர்ப் பிரச்னைக்கு புதிய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டுகிறோம். வளாகத்தில் உள்ள B Type அங்காடிகளுக்கு கழிவறை வசதி அமைத்துத் தர வேண்டுகிறோம்.
அந்நியர்கள் ஆட்சி செய்து அழிச்சாட்டியம் செய்த காலத்திலேயே சுதேசி கப்பல் நிறுவனம் தொடங்கி, தமிழர்களின் வணிக பெருமையை இந்திய வரலாற்றில் பதிவு செய்த கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. அவர்களின் பெயரை கோயம்பேடு உணவு தானிய வணிக வளாகத்திற்குச் சூட்ட புதிய அரசு ஆவன செய்யும்படி வேண்டுகிறோம். முந்தைய ஆட்சியில் இதனை பலமுறை வலியுறுத்தியும் நிறைவேற்றப்படவில்லை. புதிய அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. காரணம், காய்கறி வணிக வளாகத்திற்கு பெரியார் பெயரையும், கனி அங்காடி வளாகத்திற்கு அண்ணா பெயரையும், மலர் அங்காடி வளாகத்திற்கு காமராஜர் பெயரையும் சூட்டி அழகு பார்த்தவர் முத்தமிழ் அறிஞரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி.
மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை உடனடியாகப் பரிசீலித்து, உரிய நடவடிக்கைகள் எடுத்து, நிறைவேற்றிக் கொடுக்கும்படி மாண்புமிகு அமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறோம்’’ என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.