இளைஞர் மற்றும் இளம்பெண்களின் திறனை மேம்படுத்தும் வகையில் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிறுவனம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்து அமைக்கும் திறன் மேம்பாட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய நிலக்கரி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் பியூஸ்கோயல் பேசும்போது,
என்.எல்.சி. இந்தியா நிறுவனம் சுரங்கப்பணி மின் உற்பத்தியில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. 1956-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது தமிழகத்துக்கு மட்டுமின்றி, நாடு முழுவதும் மின்சாரத்தை வழங்கி தனது வணிகத்தைப் பெருக்கி வருகிறது.
இந்த நிறுவனம் 2020-ம் ஆண்டுக்குள் மகாரத்னா அந்தஸ்துபெறும். நஷ்டத்தில் இயங்கி வந்த பொதுத்துறை நிறுவனங்கள் பிரதமரின் வழிகாட்டுதலின்படி தற்போது லாபம் ஈட்டத் தொடங்கியுள்ளன.
காவிரி நதிநீர் பிரச்சனையில் சுப்ரீம் கோர்ட்டின் வழி காட்டுதல் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு அடிப்படையில், இரு மாநில மக்களும் பயனடையும் வகையில் விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும். இதற்காகமத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார்.
மேலும், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணியாற்றுவார் என அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
