தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு ஆணைகளை வழங்கவுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு ஆணைகளை வழங்கவுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கோடை காலத்தில் தமிழகம் முழுவதும் சீரான மின் விநியோகம் வழங்குவது குறித்தும், முதலமைச்சர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்தும் அமைச்சர் செந்தில் பாலாஜி, தலைமை பொறியாளார்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது தமிழக மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியதாக தெரிகிறது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி , தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்கக்கோரி பதிவு செய்து காத்திருந்த விவசாயிகளுக்காக, 1 லட்சம் மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்கி வைத்ததாக தெரிவித்தார்.

கடந்த 6 மாத காலத்தில் 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் தலைமையின் கீழ் அனைத்து அலுவலர்களும் மிகவும் சிறப்பாக செயல்பட்டதன் மூகம் இந்த சாதனை நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். இந்த திட்டத்தை சிறப்பிக்கும் வகையில் நாளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு ஆணைகளை வழங்கவுள்ளதாக தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுடன் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் கலந்துரையாட உள்ளதாகவும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
