வங்கி கடன் மோசடி வழக்கில் மத்திய பிரதேச முதலமைச்சர்  கமல்நாத்தின் மருமகன் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு உள்ளார்.

மத்திய பிரதேச அமைச்சர் கமல்நாத்தின் மருமகனும் தொழிலதிபருமான ரதுல் புரி, இந்துஸ்தான் பவர்புராஜக்ட்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக அந்த நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1,350 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதைத்தொடர்ந்து டெல்லியில் பினாமி பெயரில் வாங்கப்பட்டு இருந்த ரதுல் புரியின் வீட்டை வருமான வரித்துறை முடக்கி உள்ளது. மேலும் மொரீசியசை சேர்ந்த நிறுவனம் ஒன்றிடம் இருந்து பெற்று வைத்திருந்த அன்னிய நேரடி முதலீட்டு தொகை 40 மில்லியன் டாலரும் (சுமார் ரூ.284 கோடி) முடக்கப்பட்டது.

பினாமி சொத்து பரிமாற்ற சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த முறைகேடு தொடர்பாக ரதுல் புரியின் தந்தையும், கமல்நாத்தின் மைத்துனருமான தீபக் புரி மீதும் விசாரணை நடந்து வருகிறது. ரதுல் புரி மீது ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கிலும் விசாரணை நடந்து வருகிறது.

இதனிடையே, ரூ.354 கோடி அளவிலான வங்கி கடன் மோசடி வழக்கில், கமல்நாத்தின் மருமகனான தொழிலதிபர் ரதுல் புரி பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் நீதிமன்றத்தின் முன் இன்று ஆஜர்படுத்தப்படுவார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.