கடந்த 22ம் தேதி நீர்சத்து குறைபாடு மற்றும் காய்ச்சல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் முதலமைச்சர் ஜெயலலிதா.
கடந்த 13 நாட்களாக முதலமைச்சரின் உடல்நிலை குறித்து பல வதந்திகள் கிளம்பின. ஆனால் ஆரம்ப நாள் முதலே காய்ச்சல் என தெரிவித்து வந்த அப்பல்லோ நிர்வாகம் பின்னர் கிருமி தொற்றுக்கு சிகிச்சை அளித்து வருவதாக தெரிவித்தது.

பிரபல லண்டன் ரிச்சர்ட் பீலே பிரத்யேகமாக வரவழைக்கப்பட்டு ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்தார்.
ரிச்சர்டின் சிகிச்சையை அடுத்து முதலமைச்சரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு பொறுப்பு கவர்னர் வித்யா சாகர் ராவ் சென்று மருத்துவமனையில் பார்த்தபோதும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

அதனையடுத்து அவ்வப்போது அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகமும், தொடர்ந்து முன்னேற்றம் என்ற செய்தியும் வெளியிட்டு வந்தது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு மூத்த பத்திரிக்கையாளர் மாலினி பார்த்தசாரதியும் முதலமைச்சர் நன்கு தேறிவருகிறார் என்ற நம்பகதன்மையான தகவலை டிவிட்டரில் வெளியிட்டிருந்தார்.
இந்தநிலையில், சுவாச கோளாறு தொடர்பாக நுரையீரல் சிகிச்சை மேற்கொண்ட ஜெயலலிதா சி.சி.யு.வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தற்போது முதலமைச்சருக்கு அளிக்கப்படும் மருந்துகள் நன்றாக வேலை செய்ய ஆரம்பித்துள்ளதால் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனால், இன்று மாலைக்குள் சி.சி.யுஎனப்படும் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து நார்மல் வார்டு எனப்படும் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட உள்ளார்.
சாதாரண வார்டில் சில நாட்கள் ஓய்வு மற்றும் சிகிச்சை எடுத்துக்கொண்டபின் தான் போயஸ் கார்டனுக்கு திரும்புவார் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
