நீங்கள் இதை செய்தால் தான் நான் மகிழ்ச்சியடைவேன்..! கழகத்தொண்டர்களே..! முதலமைச்சரின் பரபரப்பு டீவிட்..!
வரலாறு காணாத பெருமழைக் காலத்திலும், கடைக்கோடியில் உள்ள ஒருவர் கூட உணவுக்குச் சிரமப்படவில்லை என்று வரும் செய்திதான், கழக செயல்வீரர்கள் மக்களுக்கு ஆற்றியுள்ள மனிதநேய கடமைக்கான அங்கீகாரம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழையையொட்டி, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் விடிய விடிய கொட்டும் மழையினால், நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. கரையோர மற்றும் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்களின் குடியிருப்புக்குள் வெள்ளநீர் புகுந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால், மக்கள் வீட்டிற்குள்ளே முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தொடர் மழை மற்றும் அணைகள் நிரப்பி, திறக்கப்படும் உபரி நீரால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற் பயிர்கள், வாழைகள் நீரில் மூழ்கி சேதமாகியுள்ளன.
தமிழகத்தில் மழைவெள்ளம் பாதித்த பகுதிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் ஆய்வு செய்து, மக்களுக்கு தேவையான நிவாரணப்பொருட்களை வழங்கி வருகின்றனர்.மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில், நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இதுக்குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அதில் ”இந்த இடர்மிகு சூழலில், மழை வெள்ள நிவாரணப் பணிகளில் கழகத்தினர் அனைவரும் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வரும் செய்திகள் எனக்கு வந்து கொண்டிருப்பது மனதிற்கு ஆறுதல் அளிக்கிறது. மழை தொடர்ந்து கொண்டிருப்பதால் முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் அடித்தட்டு மக்களுக்கு உணவு கிடைப்பதில் எவ்வித சிரமங்களும் நேராமல் இருக்க, அமைச்சர்கள், கழக மக்கள் பிரதிநிதிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் அனைவரும் ஏழை எளிய மக்களின் உணவு மற்றும் உடைமைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் முன்னணியில் நின்று செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். வரலாறு காணாத பெருமழைக் காலத்திலும், கடைக்கோடியில் உள்ள ஒருவர் கூட உணவுக்குச் சிரமப்படவில்லை என்று வரும் செய்திதான், நம் கழகச் செயல்வீரர்கள் மக்களுக்கு ஆற்றியுள்ள மனிதநேயக் கடமைக்கான அங்கீகாரம் ஆகும். எனக்கு மகிழ்ச்சியளிப்பதும் அதுதான். ஆகவே, கட்சியினர் அனைவரும் அதிகாரிகளுடன் இணைந்து நின்று பணியாற்றி, மக்களை இன்னலின்றிக் காப்பாற்றிட உழைத்திடுமாறு உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் கூறியுள்ளார்.