அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கடந்த 22ம் தேதி முதல், முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். லண்டனைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் ரிச்சர்டு ஜான் பீலே, கடந்த 30ம் தேதி சென்னைவந்தார்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்து, சிகிச்சை அளிக்கும் மருத்துவ நிபுணர்களோடு ஆலோசனை நடத்தினார். டாக்டர் ரிச்சர்டின் பரிந்துரையின் பேரில், முதல்வருக்கு நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்துகள் (ஆன்டிபயாடிக்) வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் முதல்வரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. ஏற்கெனவே அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவ நிபுணர் குழுவினர் அவரின் உடல்நிலையை தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். மேலும் சில நாள்கள் அவர் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.