மக்களைக் கண்டுதான் பயப்படுவோம்… உன்னைப் போல ஆளுக்கெல்லாம் அஞ்சமாட்டோம் … இபிஎஸ் ஆவேசம்…
பேடி என்று சொன்னாயே…நானா பேடி..நாங்கள் எல்லாம் மக்களைக் கண்டுதான் பயப்படுவோம், உன்னைப் போல பதவி வெறி பிடித்த ஆட்களுக்கெல்லாம் அஞ்ச மாட்டோம் என சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசினார்.
ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற போரில் இலங்கை ராணுவத்திற்கு தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி அரசு உதவியதன் மூலம் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும், இதற்கு காரணமான தி.மு.க.-காங்கிரஸ் கட்சியினரை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க கோரி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. தலைமை அறிவித்தது.
அதன்படி சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இலங்கையில் நடைபெற்ற துயரமான சம்பவத்திற்கு துணை போனவர்கள் தி.மு.க.,வினர்தான் என்றும், போர் நின்று விட்டுவிட்டது என பதுங்கு குழியில் இருந்து வெளியே வந்த நம் இன மக்கள் கொல்லப்பட்டனர் என்றும் குற்றம் சாட்டினார்.
மத்திய அரசு மற்றும் சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கவே இந்த கண்டன கூட்டம் நடைபெறுகிறது என அவர் தெரிவித்தார். இலங்கையில் நடைபெற்ற இந்த துயரத்துக்கு காங்கிரஸ் மற்றும் திமுகதான் காரணம் என்று தெரிவித்தார்.
பேடி என்று சொன்னாயே…நானா பேடி..நாங்கள் எல்லாம் மக்களைக் கண்டுதான் பயப்படுவோம், உன்னைப் போல பதவி வெறி பிடித்த ஆட்களுக்கெல்லாம் அஞ்ச மாட்டோம் என ஸ்டாலினுக்கு எதிராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசினார்.