cm edappadi palanisamy visit to kanniakumar dist
ஒகி புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.
கன்னியாகுமரி அருகே தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஒகி புயலாக மாறி குமரி மாவட்டத்தையே பந்தாடிவிட்டது. பல்லாயிரக்கணக்கான மரங்கள் வேறோடு சாய்ந்தன. பலத்த மழை காரணமான ஏராளமான வீடுகள் நீரில் மூழ்கின. 2000 ற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் குமரி மாவட்டமே இருளில் மூழ்கியது.

ஒகி புயலால் விவசாயிகள் பொருளாதார அளவில் கடும் பாதிப்படைந்துள்ள நிலையில், அம்மாவட்ட மீனவர்கள் இதுவரை இல்லாத அளவில் கடுமையான உயிர் மற்றும் பொருட்சேதத்தை அடைந்துள்ளனர். ஏராளமான மீனவர்கள் கடலுக்குள்ளேயே மாண்டு போயினர்.

மீன்பிடிக்க கடலுக்கு சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஒகி புயலில் சிக்கி மாயமாகினர். அவர்களை மீட்டுத்தரவேண்டும் என மீனவர்கள் கடந்த ஒரு வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குழித்துறையில் நடந்த ரயில் மறியல் போராட்டம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், தமிழக அரசு மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர்.

மேலும் இவ்வளவு பெரிய புயல் அடித்தும் பாதிக்கப்பட்ட மக்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வந்து பார்க்கவில்லையே என மீனவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.
இந்நிலையில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிடுகிறார்.. சென்னையில் இருந்து விமானம் மூலம் துாத்துக்குடி சென்று அங்கிருந்து சாலை வழியாக கன்னியாகுமரி செல்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
தமிழக அரசு மீதும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதும் கடும் கோபத்தில் இருக்கும் குமரி மாவட்ட மக்கள் அவரை எப்படி வரவேற்கப் போகிறார்கள் என்பது அவர் ஆய்வு செய்யும்போதுதான் தெரியவரும்.
