2 ஆண்டுகளில் திமுக என்ற கார்ப்ரேட் கம்பெனிக்கு மூடுவிழா.. சேகர் பாபுவே ஒத்துக்கிட்டார்.. ஜெயக்குமார் நக்கல்.
அதை ஒப்புக் கொள்ளும் வகையில்தான் அமைச்சர் சேகர் பாபுவின் பதில்களும் உள்ளது. திமுகவின் ஆட்சியைக் கவிழ்த்தாலும் பரவாயில்லை, ஆனால் கலைத்தாலும் மீண்டும் நாங்கள் தான் ஆட்சிக்கு வருவோம் என கூறுகிறார்.
திமுக வீட்டுக்கு போக வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும், இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி என்ற கார்ப்பரேட் கம்பெனிக்கு மூடுவிழா நடத்தப்படும் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலடித்துள்ளார். இதை இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபுவே ஒப்புக்கொண்டதாகவும் ஜெயக்குமார் திமுகவை நையாண்டி செய்துள்ளார்.
பல்வேறு எதிர்ப்பு, யுக்திகளை கையாண்டு பத்தாண்டுகள் கழித்து திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. ஆட்சி பொறுப்பேற்றது முதல் அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்று வருகிறது. கொரோனா தொற்று, மழை வெள்ள நிவாரணம் போன்ற பணிகளில் அரசு செயல்பட்ட விதத்தை மக்கள் பாராட்டி வருகின்றனர். இது ஒருபுறம் இருந்தாலும் எதிர்க்கட்சியான அதிமுக பாஜக தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை என தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக நீட் தேர்வு விலக்கு, குடும்பத் தலைவனுக்கு மாதம் 1000 ரூபாய் நிதி உதவி, நகை கடன் ரத்து என கொடுத்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை, பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுகவை மக்கள் நிச்சயம் புறக்கணிப்பார்கள் என திமுகவையும், முதல்வர் ஸ்டாலினையும் எதிர்க்கட்சிகள் சரமாரியாக விமர்சித்து வருகின்றன.
இதையே நடந்துவரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சார வியூகமாக அதிமுக-பாஜக கையாண்டு வருகிறது. வாக்குறுதிகளை நிறைவேற்றாததால்தான் மக்கள் முன் செல்ல ஸ்டாலின் அஞ்சுகிறார், பிரச்சார களத்திற்கு நேரடியாக சென்றால் மக்கள் கேள்வி கேட்பார்கள் என்பதால்தான் அவர் காணொலிக் காட்சியின் மூலம் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில்தான் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மகளிருக்கு மாதம் ஆயிரம் கொடுக்கப்பட்டும் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு வரவேற்பை பெற்றிருந்தாலும், எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விரைவில் திமுக ஆட்சி வீட்டுக்கு போகும் காலம் வந்துவிட்டது என கூறியுள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது,
ஸ்டாலின் அவர்களை பொறுத்தவரையில் சினிமாவில் நடிகராக இருந்து வந்தவர்தான், அதனால் எதையும் மனப்பாடம் செய்து ஒப்புவிப்பவராக அவர் இருந்து வருகிறார். அவர் நடித்த சில படங்கள் ஓடவில்லை என்பது வேறு விஷயம், ஆனால் அதில் வரும் கதை வசனங்களை முழுமையாக மனப்பாடம் செய்து அதை ஒப்புவிப்பதில் வல்லவர். முழுமையாக மனப்பாடம் செய்து அதை சரியாக ஒப்புவிப்பவராகவே உள்ளார். யாரோ எழுதிக் கொடுத்ததை தான் வீடியோ கான்பரன்சில் படிக்கிறார். இது ஒருபுறம் இருந்தாலும் ,டுவிட்டரில் ஒரு தகவல் வந்தால் அதற்கு ஏதேதோ பதில் போடுகிறார். மேற்குவங்க ஆளுநரை பொருத்தவரையில் அம்மாநில சட்டமன்ற கூட்டத்தொடரை ஒத்தி வைத்திருக்கிறார் ஆனால் அவர் முடக்கி விட்டதாக ஸ்டாலின் எதிர்வினையாற்றுகிறார்.
அவருக்கு கீழே உள்ள அதிகாரிகள் இதை எடுத்து சொல்லியிருக்க வேண்டாமா? எந்த அளவிற்கு தமிழ்நாட்டு முதல்வர் சிந்திக்க தெரியாதவராக இருக்கிறார் என்பது இதன் மூலம் தெரிகிறது. நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள முடியாத ஒரு முதலமைச்சரை நாம் பெற்றிருப்பது கவலையடையளிக்கிறது. எது எப்படியோ இந்த ஆட்சியை பொருத்தவரையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கூறியதுபோல கண்டிப்பாக வீட்டுக்கு போக வேண்டிய ஆட்சிதான். சட்டமன்ற தேர்தல்,பாராளுமன்ற பொதுத்தேர்தலுடன் சேர்ந்து வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனென்றால் நாட்டில் அது போன்ற அறிகுறிகள் தென்படுகிறது. வன்முறை கலாச்சாரம், தீவிரவாதம் தொடர்கிறது. இவற்றையெல்லாம் மத்திய அரசு கண்காணித்து வருகிறது. எனவே நாட்டு மக்களுக்கு பொதுவான ஒரு அமைதி தேவைப்படுகிறது. நிச்சயமாக இரண்டு ஆண்டுகளுடன் திமுக என்ற கார்ப்பரேட் கம்பெனிக்கு மூடுவிழா செய்யப்படும்.
அதை ஒப்புக் கொள்ளும் வகையில்தான் அமைச்சர் சேகர் பாபுவின் பதில்களும் உள்ளது. திமுகவின் ஆட்சியைக் கவிழ்த்தாலும் பரவாயில்லை, ஆனால் கலைத்தாலும் மீண்டும் நாங்கள் தான் ஆட்சிக்கு வருவோம் என கூறுகிறார். அப்படி என்றால் அவர் திமுக ஆட்சியை கலைப்பது நல்லது என ஒப்புக்கொள்கிறார். அமைச்சராக இருப்பவர் ஆட்சியையெல்லாம் கலைக்க முடியாது, எது வேண்டுமானாலும் பேசலாமா என்றல்லவா கேட்டிருக்க வேண்டும், ஆனால் குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறது அதனால்தான் அவர் ஆட்சியை கலைத்தாலும் பரவாயில்லை என்று பேசுகிறார். மீண்டும் திமுக வரப்போவதில்லை, ஒருமுறை தமிழக மக்கள் ஏமாந்து விட்டார்கள், இனியும் திமுகவிடம் ஏமாற மாட்டார்கள். கடந்த 8 மாதங்களாக திமுக என்ன விதைத்ததோ அதுதான் விலையும். கடந்த 8 மாதமாக வன்முறை விதைக்கப்பட்டிருக்கிறது. தீவிரவாதம் தலை தூக்கியிருக்கிறது. நிச்சயம் அதை திமுக அறுவடை செய்யும், எனவே வீட்டுக்கு போகும் நாள் விரைவில் வரும் இவ்வாறு ஜெயக்குமார் கூறியுள்ளார்.