சீனா எங்களின் மிக முக்கிய கூட்டாளி. ஆப்கானிஸ்தானை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவதற்கு சீனாவைப் பெரிதும் நம்புகிறோம்.

ஆப்கானிஸ்தானில் ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுடன் இணைந்து சண்டையிட பாகிஸ்தான் தனது ராணுவ வீரர்களை அனுப்பி வைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், தலிபான் பயங்கரவாதிகளுடன் பாகிஸ்தான் பிரஜைகள் இருந்ததை உறுதிப்படுத்த எந்த ஆதாரமும் இல்லை என அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தலிபான்கள் சீனா தங்களின் மிக முக்கிய கூட்டாளி என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஜபிபஹுல்லா முஜாஹித், ’’சீனா எங்களின் மிக முக்கிய கூட்டாளி. ஆப்கானிஸ்தானை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவதற்கு சீனாவைப் பெரிதும் நம்புகிறோம். சீனா எங்களுக்கு ஒரு அடிப்படை மற்றும் அசாதாரண வாய்ப்பை பிரதிபலிக்கிறது. பொருளாதாரத்தை வலுப்படுத்த, நிதியளிக்க சீனா தயாராக இருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் வளமான சுரங்கங்கள் உள்ளன. சீனாவின் உதவியால் அவற்றை மீண்டும் செயல்படவைக்கலாம், நவீனமயமாக்கலாம். அதோடு சீனாவின் மூலமாக உலகெங்கிலும் உள்ள சந்தைகளுக்கு எங்கள் சுரங்க தயாரிப்புகளை எடுத்துச் செல்லலாம். சீனாவை ஆப்பிரிக்கா ஆசியா மற்றும் ஐரோப்பாவுடன் இணைக்க முயற்சிக்கும் சீனாவின் ‘ஒன் பெல்ட், ஒன் ரோடு' முயற்சிக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம்’’என அவர் தெரிவித்தார்