முதல்வர் வேட்பாளர் எடப்பாடியார்தான்... இடையூறு செய்தால் ஒதுக்கிடுவோம்.. பாஜகவுக்கு கே.பி. முனுசாமி எச்சரிக்கை!
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்பதில் யார் இடையூராக வந்தாலும் அவர்களை ஒதுக்கி விடுவோம் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எச்சரித்துள்ளார்.
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி முதல்வர் வேட்பாளரை தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமையே அறிவிக்கும் என்று கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த கே.பி. முனுசாமி, “இதெல்லாம் முகாந்திரம் இல்லாத கருத்து ஆகும். அதிமுக தலைமை எடுத்த முடிவுப்படி எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் ஆவார். இதில் யார் இடையூறாக வந்தாலும் ஒதுக்கி வைத்துவிடுவோம்” என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “புதிய கட்சி தொடங்க வரும் எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆட்சிதான் அமைப்போம் என்று சொல்கிறார்கள். கருணாநிதி ஆட்சி என்று யாரும் சொல்வதில்லை. பொங்கல் பரிசுகளை அரசு, அதிகாரிகள் மூலமாகத்தான் வழங்கப்பட்டு வருகிறது. அதிமுக அரசு மட்டுமே பொங்கல் பரிசுகளை வழங்கி வருகிறது” என்று கே.பி.முனுசாமி தெரிவித்தார்.