பிரதமர் மோடியை மேடையில் வைத்துகொண்டே கிளாஸ் எடுத்தவர்தான் நமுடைய தலைவர். இதுதான் திராவிட மாடல் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தமிழக முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவருமான மு. கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி ‘கலைஞர் 99’ என்று பெயரில் கருத்தரங்கு மற்றும் திராவிட மாடல் பயிற்சி தொடக்க விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசுகையில், “நான் இளைஞரணி செயலாளராகப் பதவியேற்று முதல் நிகழ்ச்சி கலைஞர் அரங்கத்தில் இளைஞரணி சார்பில் நடக்கிறது. இது எனக்குப் பெருமையாக உள்ளது. திமுகவில் 25 லட்சம் உறுப்பினர்களை புதிதாக சேர்த்து இருக்கிறீர்கள். ஆனால், இதில் 4 லட்சம் பேர் இரு முறை பதிவு செய்துள்ளனர். எனவே, 21 லட்சம் பேர்தான் புதிதாகப் பதிவு செய்துள்ளார்கள்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்தப் பயிற்சி பாசறையை உங்கள் பகுதியில் ஓர் அரங்கத்தை ஏற்படுத்தி கூட்டம் கூட்டினாலே போதும். இளைஞர் அணியினர் பெரிய அளவில் கூட்டங்களை நடத்திட வேண்டியதில்லை. வெறும் 100 பேரை மட்டுமே வைத்து சிறிய அளவில் கூட்டங்களை நடத்தினாலும் போதும். திமுகவின் கொள்கைகளை அவர்களிடம் கொண்டு போய் சேர்க்க முடியும். இப்படிக் கூட்டம் நடத்துவதன் மூலம் உண்மையான பலன் கிடைக்கும். தமிழகம் முழுவதுமே திராவிட மாடல் பயிற்சி நடைபெறும். உறுப்பினர் சேர்க்கையில் முதலில் ஆய்வு செய்து, பின்னரே அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். பின்னர் வாட்ஸ் அப் குழுவில் இணைக்கலாம்.

திமுகவுக்கு மாற்று பாஜக என்கிறார்கள். அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளை பாஜக கபளிகரம் செய்வதாகவும் கூறுகிறார்கள். அதைப் பற்றிய அரசியல் புரிதலோடு நாம் இருக்க வேண்டும். ஒட்டுமொத்த தமிழர்களையும் திமுக பக்கம் ஈர்க்கும் நோக்கில் செயல்படவேண்டும். பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியரின் எழுத்துகள் நம்மிடம் உள்ளன. அதோடு திராவிட மாடல் ஆட்சி நடத்தும் நம் தலைவரின் சாதனைகள் உள்ளன. நம் கொள்கைகளையும் சாதனைகளையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் நமுடைய பணி. அதற்காகத்தான் பாசறையை தற்போது ஆரம்பித்துள்ளோம். என்னை சின்னவர் என்று அழைத்தார்கள். உங்களோடு ஒப்பிடுகையில் நான் சின்னவன்தான். 

பிரதமர் மோடிக்கே கிளாஸ் எடுத்தவர் நம் தலைவர். மோடியை மேடையில் வைத்து மாநில தேவை குறித்து கோரிக்கைகளை வைத்தார். மோடிக்கு மேடையில் இருக்குபோதே கோரிக்கை வைத்த ஒரே முதல்வர் நம்முடைய முதல்வர்தான். இதுதான் திராவிட மாடல்” என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.