தனுஷ் தற்கொலைக்கு முதல்வர் ஸ்டாலின்தான் காரணம்... ஹெச்.ராஜா அதிரடி குற்றச்சாட்டு..!
மாணவர் தற்கொலைக்கு முழுக்க முழுக்க காரணம் முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக, அதன் கூட்டணி கட்சிகள்தான் என்று பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
கடலூரில் ஹெச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நீட் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்ப்பது, நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டங்களை எதிர்ப்பது என தீய செயல்களில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. இதன் விளைவாகத்தான் சேலத்தில் மாணவர் தனுஷ் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். மாணவர் தற்கொலைக்கு முழுக்க முழுக்க காரணம் முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக, அதன் கூட்டணி கட்சிகள்தான். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் காரணமாகத்தான் நீட் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகு மத்திய அரசே நினைத்தாலும் நீட் தேர்வை மாற்ற முடியாது.
அப்படி ஒரு சூழல் இருக்கையில், தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் மாணவர்கள் மத்தியில் நீட் தேர்வு நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகத்தை உருவாக்குகிறார்கள். எல்லா மாநிலங்களிலும் நீட் தேர்வு நடைபெறுகிறது. மற்ற மாநிலங்களில் யாரும் எதிர்க்கவில்லை. தற்போது தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம், முதல்வரின் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது” என்று ஹெச்.ராஜா தெரிவித்தார்.