நீட் தேர்விலிருந்து விலக்கு பெற முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியாக உள்ளார்.. அடித்துச் சொல்லும் தயாநிதி மாறன்.
எய்ம்ஸ், ஜிப்மர் கல்லூரிகளில் நீட் தேர்வு இல்லை, நுழைவுதேர்வு தனி தனியாக நடத்தப்படுகிறது. தமிழகத்திற்கும் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்.
தமிழகத்திற்கும் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதி ஏழுகிணறு பகுதியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு , மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன் ஆகியோர் தமிழக அரசின் ரூ. 2000 மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன், சொல்வதை செய்வோம் செய்வதை சொல்வோம் என்ற வாக்கிற்கு ஏற்ப கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது என்றார். மேலும், கொரோனா ஊரடங்கின் போது கடந்த ஆட்சியில் 5 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினோம். தற்போது ஊரடங்கு காரணமாக முதற் கட்டமாக கடந்த மாதம் 2 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரண வழங்கினோம் தற்போது 2 ஆயிரம் ரூபாய் மற்றும் மளிகை பொருட்களை அடங்கிய தொகுப்பை வழங்கி வருகிறோம். தமிழக முதலமைச்சர் பதவிக்கு வந்த நாள் முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகிறார். கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்தி வெற்றியும் பெற்றுள்ளோம்.
சில மாவட்டங்களில் தொற்று அதிகமாக உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளோம். அரசு கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பொதுமக்கள் விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்த முடியும். எய்ம்ஸ், ஜிப்மர் கல்லூரிகளில் நீட் தேர்வு இல்லை, நுழைவுதேர்வு தனி தனியாக நடத்தப்படுகிறது. தமிழகத்திற்கும் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.