நானும் ஒரு விவசாயி தான்.. வயலுக்கு சென்று விவசாயிகளை சந்தித்த முதல்வர்!!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் காவிரியிலிருந்து டெல்டா பாசனத்துக்கு ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் விதித்த தீர்ப்பை உடனே அமல்படுத்த வலியுறுத்தியும் திருவாரூரில் நேற்று அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்ற முதல்வர் பழனிசாமிக்கு திருவாரூர் மாவட்ட எல்லையான நீடாமங்கலம் ஒன்றியம் கோயில் வெண்ணியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அங்கிருந்து திருவாரூருக்கு முதல்வர் பழனிசாமி காரில் புறப்பட்டு சென்றார். அப்போது, தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கொண்டியாறு பகுதியில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த விவசாயிகளை கண்ட முதல்வர் பழனிசாமி, காரை நிறுத்திவிட்டு இறங்கி, வயலுக்குள் சென்றார்.
வயலுக்கு சென்று அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த விவசாயிகள் மற்றும் விவசாய கூலித்தொழிலாளர்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பாசனத்துக்கு தேவையான நீர் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக விவசாயிகளிடம் தெரிவித்த முதல்வர், அவர்களுக்கு சால்வை அணிவித்து, தானும் ஒரு விவசாயிதான் என்று கூறினார்.