#ValimaiCement தமிழக அரசின் வலிமை நாளை ரிலீஸ் ; புதிய சிமெண்டை அறிமுகம் செய்யும் முதல்வர்!!
தமிழக அரசின் வலிமை சிமெண்டை நாளை முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிமுகம் செய்து வைக்கிறார். இதன் மூலம் வெளிசந்தையில் சிமெண்ட் விலை குறைய வாய்ப்பிருப்பதாக நம்பப்படுகிறது.
சில மாத இடை வெளியில் கிடுகிடுவென உயர்ந்த கட்டுமான பொருட்களின் விலை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சென்ற மார்ச் மாதத்தில் ஒரு மூட்டை சிமெண்ட் விலை 420 ரூபாயாக இருந்தது. அதன் பிறகு போடப்பட்ட ஊரடங்கிற்கு பிறகு சிமெண்ட் விலை உயர்ந்து ரூ.490க்கு விற்பனையானது. மீண்டும் விலை உயர்த்தப்பட்ட சிமெண்ட் ரூ.500 யை தண்டி விற்பனை ஆனது பொதுக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. விடு என்பது பலரது கனவாக இருக்கும் நிலையில் இது போன்ற விலையேற்றங்கள் பொதுமக்களுக்கு பெரும் சோதனையாக அமைகிறது.
இந்த விலையேற்றத்திற்கு நிலக்கரி தட்டுப்பாடு, போக்குவரத்துச் செலவுகள் அதிகரிப்பு போன்ற காரணங்கள் சொல்லப்பட்டது. பின்னர் விலை குறைக்கப்பட்டாலும் மீண்டும் அக்டோபர் வாக்கில் மீண்டும் சிமெண்ட் விலை ஏற்றப்பட்டது. அரசின் தலையீட்டால் விலை குறைக்கப்பட்டு ரூ.440 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது,
ஏற்கனவே மணல் தட்டுப்பாடு எம்சாண்ட் விலையேற்றம் என கட்டுமான தொழில் படாதபாடு பட்டு வரும் நிலையில் சிமெண்ட் விலையேற்றத்தை கட்டுப்படுத்த அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
பின்னர் சிமெண்ட் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு தரப்பிலிருந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக தொழில் துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு சிமெண்ட் விலைக் குறைப்புக்காக வலிமை என்ற பெயரில் சிமெண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சிமெண்ட் உற்பத்தியை உயர்த்தி விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசின் வலிமை சிமெண்டை நாளை முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிமுகம் செய்து வைக்கிறார். தமிழ்நாடு அரசின் டான்செம் நிறுவனம் தயாரித்துள்ள சிமெண்ட் மூலம் வெளிசந்தையில் சிமெண்ட் விலை குறைய வாய்ப்பிருப்பதாக நம்பப்படுகிறது.