நீங்களும் வந்துருங்க.. புத்தக வெளியீட்டு விழாவுக்கு எடப்பாடியை அழைத்த ஸ்டாலின்.. பின்னணி இதுதான் !!
முதல்வர் மு.க.ஸ்டாலினின் 'உங்களில் ஒருவன்' தன் வரலாறு நூல் வெளியீட்டு விழாவுக்கு ஓபிஎஸ். இபிஸ் உள்ளிட்டோருக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.
முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பிப்ரவரி 28-ம் தேதி நடைபெற உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் நூல் வெளியீட்டு விழாவுகு சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கிறார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மு.க.ஸ்டாலின் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
இதேபோன்று நடிகர் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோரையும் அவர் நேரில் சந்தித்து அழைப்பிதழ் அளித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. சென்னை புத்தக் கண்காட்சியில் இதுகுறித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘நான் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ நூலின் முதல்பாகம் இந்த மாத இறுதியில் வெளியிடப்பட உள்ளது.
எனது வாழ்க்கைப் பயணத்தின் சுவடுகளை அதில் பதிவு செய்துள்ளேன். இளமைக் காலம், பள்ளிப்படிப்பு, கல்லூரிக் காலம், அரசியல் ஆர்வம், முதலில் நடத்திய கூட்டம், அதில் முதல் பேச்சு, திரையுலகம், திருமணம், மிசா காலத்தின் தொடக்கம் வரையிலான பதிவுகள் அதில் இடம்பெற்றுள்ளன. கடந்த 1976 வரையிலான பதிவுகளுடன் முதல் பாகமாக அதை எழுதியுள்ளேன். விரைவில் புத்தகக் காட்சிக்கும் அந்த நூல் விற்பனைக்கு வரும்’ என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.