ஒபிஎஸ்சும் இபிஎஸ்சும் இரட்டைக் குழல் துப்பாக்கியாம்... அப்ப மைத்ரேயன், முனுசாமி சொன்னது?
இபிஎஸ் தரப்பினர் தங்களை ஒதுக்குவதாக ஒபிஎஸ் தரப்பினர் கூறிவரும் நிலையில், தாமும், பன்னீர்செல்வமும் இரட்டைக் குழல் துப்பாக்கி போல செயல்படுவோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக இரண்டாக பிரிந்த வேளையில் இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது.
இதையடுத்து இலையை மீட்க முதலமைச்சர் எடப்பாடி டிடிவி தரப்பை ஒதுக்கி விட்டு ஒபிஎஸ்சை இணைத்து கொண்டார்.
இதனால் தற்போது டிடிவி தரப்புக்கும் எடப்பாடி தரப்புக்கும் முட்டி கொண்டுவிட்டது. இதனிடையே சில நாட்களுக்கு முன்பு ஒபிஎஸ் தனியாக சென்று பிரதமரை சந்தித்து வந்தார். அதில் தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்ததாகவும் கூறப்பட்டது.
இதுகுறித்து ஒபிஎஸ் ஆதரவாளர் முனுசாமியிடம் கேட்டபோது மனக்கசப்பு இருப்பது உண்மைதான் என தெரிவித்தார்.
மேலும் ஒபிஎஸ் ஆதரவாளர் மைத்ரேயன் எம்.பி.யும் இபிஎஸ் தரப்பு அமைச்சர்கள் எங்களிடம் எதுவும் தெரிவிப்பதில்லை என்ற கூற்றை வெளியிட்டார்.
இந்நிலையில், இன்று தேனியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, தமிழக அரசு மக்களுக்கு நல்லதை மட்டுமே செய்து வருவதாகவும் ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்ற மண்ணின் மைந்தன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எனவும் புகழ்ந்தார்.
தாமும், பன்னீர்செல்வமும் இரட்டைக் குழல் துப்பாக்கி போல செயல்படுவோம் எனவும் மக்களுக்கு நல்லவைற்றை மட்டுமே செய்து வரும் எங்களுக்கு எப்போதும் தோல்வியே கிடையாது எனவும் குறிப்பிட்டார்.
‘சொல்வாக்கு’ சுத்தமாக இருப்பதால் ‘செல்வாக்கு’ பெருகுவதாகவும், அதனால் மக்களும் ‘நல்வாக்கு’களை வழங்குகிறார்கள் எனவும் பழனிசாமி கூறினார்.