சீனாவில் அதிகரிக்கும் கொரோனா...! மீண்டும் கட்டுப்பாடுகள் ? முதலமைச்சர் அவசர ஆலோசனை
கொரோனா பாதிப்பு தமிழகத்தில் குறைந்து வரும் நிலையில், அண்டை நாடுகளில் கொரோனா அதிகரித்து வருவதால் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
சீனாவில் மீண்டும் கொரோனா
கொரோனா வைரஸ் பாதிப்பு என்றோலே மக்கள் நினைவுக்கு வருவது உயிரிழப்பு, தங்களது அப்பா,அம்மா, சகோதரன் என பல உறவுகளை கடந்த 3 ஆண்டுகளாக இழந்து தவித்து வருகின்றனர் உலக மக்கள், தற்போது தான் கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் சற்று மீண்டுள்ளனர். இந்த நிலையில் மீண்டும் கொரோனா சீனா உள்ளிட்ட நாடுகளில் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக உலக மக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நேற்று 52 பேருக்கு மட்டுமே உறுதியாகியுள்ள நிலையில் வரும் நாட்களில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருந்த போதும் பல வருடங்களுக்கு பிறகு உயிரிழப்பும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
முதலமைச்சர் அவசர ஆலோசனை
கொரோனா பாதிப்பு தமிழகத்தில் பெரும் அளவில் குறைந்து சகஜமான நிலை உள்ளது. இந்த நிலையில் சீனா,தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே வரும் நாட்களில் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மற்றும் மருத்துவ வல்லுநர் குழுவோடு ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் ஒரு சில நாடுகளில் கொரோனா அதிகரித்து வருவதால் தமிழகத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.மேலும் வரும் 31 ஆம் தேதியோடு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் முடிவடையவுள்ளதால் அடுத்த கட்டமாக தளர்வுகள் அல்லது கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் தேர்வுகள் விரைவில் தொடங்கவுள்ளநிலையில் தேர்வை முன் கூட்டியே நடத்துவது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூடுதல் கட்டுப்பாடு ?
சீனா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் எடுக்க வேண்டிய கட்டுப்பாடுகள் தொடர்பாகவும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கொரோனா 4 வது அலை தமிழகத்தில் பரவாமல் தடுக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன குறித்து முதலமைச்சர் இந்த கூட்டத்தில் மருத்துவ அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்டறிந்ததாக தெரிகிறது. எனவே வருகிற நாட்களில் கூடுதல் கட்டுபாடுகள் விதிப்பது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.