மூன்றாவது காலாண்டில் ஜிடிபி இன்னும் மோசமாகும் !! முன்னாள் நிதி அமைச்சர் அடித்த ரெட் அலர்ட் !!
3-வது காலாண்டிற்கான ஜி.டி.பி. இன்னும் மோசமடையும் என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 வருடங்களில் இல்லாத வகையில் கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 2-வது காலாண்டில் 4.5 சதவீதம் என்ற அளவில் வீழ்ச்சி அடைந்தது.
மத்திய அரசு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 2-வது காலாண்டில் 4.5 சதவீதம் என்ற அளவில் உள்ளது. எட்டு முக்கிய தொழிற்சாலைகளின் உற்பத்தி கடந்த அக்டோபரில் 5.8 சதவீதமாக குறைந்துள்ளது என நேற்று தெரிவித்து இருந்தது.
இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நாட்டின் பொருளாதார நிலை மிகவும் கவலையளிக்கிறது. ஆனால் அதனை விட நமது சமூகத்தின் நிலை மிகவும் கவலைக்குரிய வகையில் உள்ளது என கூறினார்.
மேலும் முதல் காலாண்டில் 5 சதவீதம் என்ற அளவில் இருந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2-வது காலாண்டில் 4.5 சதவீதமாக கடும் வீழ்ச்சி அடைந்திருப்பது வருத்தத்திற்கு உரியது. இது முற்றிலும் ஏற்க இயலாதது. வளர்ச்சியானது 8 முதல் 9 சதவீதம் என்ற அளவில் இருக்க வேண்டும் என கூறினார்.
இந்நிலையில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், பரவலாக முன்பே கணித்ததன்படி, 2-வது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) 4.5 சதவீதம் ஆக குறைந்துள்ளது. அரசானது அனைத்தும் நன்றாக உள்ளது என இன்னும் கூறி வருகிறது.
மூன்றாவது காலாண்டில் இந்த சரிவு இன்னும் கூடுதலாகும். எல்லா வகையிலும் மிக மோசமடையும் என தெரிவித்து உள்ளார்.
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளால் கடந்த ஆகஸ்டு 21-ந்தேதி கைது செய்யப்பட்டு ப.சிதம்பரம் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.அவரது சார்பில் ப.சிதம்பரத்தின் குடும்பத்தினர் டுவிட்டரில் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.