Chidambaram a traitor azadi remark against national interest Subramanian Swamy

காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் ஒரு துரோகி போல பேசி வருகிறார். நாட்டின் நலனுக்கு எதிராக பேசும் அவர் விரைவில் சிறைக்கு செல்வார் என்று பா.ஜனதா மூத்த தலைவரும் எம்.பி.யுமான சுப்பிரமணிய சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காஷ்மீருக்கு சுயாட்சி

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில், “ காஷ்மீருக்கு சுயாட்சி அந்தஸ்து தர வேண்டும்’’ என்று பேசி இருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சி கூறுகையில், அது சிதம்பரத்தின் கருத்து கட்சியின் கருத்து அல்ல, அது அவரின் சொந்த கருத்து என்று தெரிவித்தது.

எதிர்ப்பு

ப.சிதம்பரத்தின் கருத்துக்கு பா.ஜனதா தலைவர்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி காஷ்மீர் என்று ஜெட்லி வலியுறுத்தினார்.

சிறை செல்வார்

இந்நிலையில், பா.ஜனதா எம்.பி. சுப்பிரமணிய சாமி நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “ சிதம்பரத்தின் பேச்சு நாட்டின் நலனுக்கு எதிராக இருக்கிறது. ஒரு துரோகி போல பேசுகிறார். தொடர்ந்து இதுபோல் காஷ்மீர் மக்களுக்காக பேசினால், விரைவில் அவர் சிறைக்கு செல்வார். அப்போது, காஷ்மீர் மக்கள் இவருக்காக கண்ணீர் விட வேண்டியது இ ருக்கும்’’ எனத் தெரிவித்தார்.

நாட்டின் நலனுக்கு எதிரானது

ப.சிதம்பரத்தின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மும்பையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது- 
 காஷ்மீர் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சி தவறான கொள்கை வைத்து இருக்கிறது. காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை காஷ்மீருக்கு சுதந்திரம் அளித்து தன்னாட்சி அளிக்க நினைக்கிறது. இது நாட்டின் நலனுக்கு எதிரானது. 

தவறான கொள்கை

கடந்த 1947ம் ஆண்டில் இருந்து காஷ்மீர் பிரச்சினை தொடர்ந்து வருவதற்கு காங்கிரஸ் அரசு காஷ்மீர் தொடர்பாக வைத்து இருக்கும் தவறான கொள்கையே காரணமாகும். காஷ்மீர் பிரச்சினை காங்கிரஸ் ஆட்சியில் தீவிரமாக இருந்தது. கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்பதை விட்டு, நாட்டில் பிரச்சினையை உருவாக்க முயல்கிறது. 

காங்கிரஸ் கட்சி நாட்டை ஏமாற்றி, தன்னையும் ஏமாற்றி, ஜம்மு-காஷ்மீர் பிரச்சினையில் பிரிவிணையை ஊக்குபடுத்துகிறது. நாட்டின் நலனை நோகடிக்கும் அந்த கட்சியின் செயல் தீவிரமானதாகும்.

வீணடிப்பு 

காங்கிரஸ் கட்சி தங்களின் 10 ஆண்டு கால ஆட்சியில், காஷ்மீர் பிரச்சினை தீர்க்கும் வாய்ப்பை வீணடித்துவிட்டது. எந்த ஒரு சிறிய நல்லெண்ண பணியும் செய்யவில்லை. தீவிரவாத செயல்களும், தீவிரவாதிகள் ஆதிக்கமும் அதிகரித்து, இயல்புவாழ்க்கை மிகுந்த தொந்தரவுக்கு உள்ளானது. 

முன்னேற்றம்

ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு செய்த முயற்சிகளாலும், நடவடிக்கையாலும், ஏராளமான முன்னேற்றங்கள் அங்கு நடந்துள்ளன. தீவிரவாதிகளுக்கு நிதி கிடைப்பதை தடுத்துள்ளோம். கல்எறிபவர்களைதடுத்துள்ளோம். கிராமத்துக்கு கிராமம் உளவுத்துறையை நியமித்துள்ளோம். தீவிரவாதிகள் ஓடுகிறார்கள், ராணுவம் வலுவுடன் இருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.