சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் பணப்பட்டுவாடா.! உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அதிகாரி உறுதி.
பொதுமக்களுக்கு பணப் பட்டுவாடா செய்தது உண்மை என விசாரணையில் நிரூபணமானால் வழக்கு பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் பணப்பட்டுவாடா விவகாரத்தில், விசாரணை அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை அயனாவரம் மார்க்கெட் பகுதியில் கொரோனோ தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி விழிப்புணர்வு நிகழ்ச்சியை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை மாநகரில் உள்ள வார்டுகள் அனைத்திலும் மினி கிளினிக் அமைக்கப்பட்டு வருகிறது என்றும், கோயம்பேட்டில் தினசரி செயல்பட கூடிய முகாம் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோயம்பேடு போன்று சென்னையில் உள்ள 80 மார்க்கெட்களிலும் இதுபோன்ற முகாம் அமைக்கப்பட்டு வருகின்றன. அதுபோன்று பெரிய அளவிலான அபார்ட்மெண்ட்கள் இருக்கும் இடங்களிலும் நடமாடும் முகாமகள் அமைக்கப்பட்டு வருகிறது என்றார். மேலும் சென்னையில் இதுபோன்ற முகாம்கள் 300 இடங்களில் உள்ளது. பொதுமக்கள் இந்த இடங்களை கண்டறிய மாநகராட்சி டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் இடங்கள் குறித்த தகவல்கள் பதிவிடப்பட்டுள்ளது என்றும், தொடர்ந்து சென்னை மாநகரில் கொரோனா விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருவதாக கூறினார்.
இந்நிலையில் தடுப்பூசி மட்டும்தான் நோய் பதிப்புக்கான மருந்தாக பார்க்கப்படுகிறது. அதனை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும், கட்டாயம் 3 மாதம் முககவசம் அணிவதை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், தடுப்பூசி செலுத்தினால் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது என்றார். இதுவரை 4 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர், அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை என்றார். மேலும் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டால் 40 நாட்களில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தி விடலாம் என்று தெரிவித்துள்ளார். அதேபோல் நாளொன்றுக்கு தற்போது சென்னையில் 14 ஆயிரம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், இதுவரை 40% அளவிற்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளன எனவும், 1 லட்சத்து 10 ஆயிரம் சிகிச்சை முகாமகள் செயலப்படுத்தப்பட்டு வருவதாகவும், அதில் குறிப்பிட்ட அளவிலேயே மருத்துவ பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர் எனவும் கூறினார்.
அதேபோன்று தேர்தல் நேரம் என்பதால் கொரோனா பரவாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் உடன் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும் என அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடன் ஆலோசனை நடத்தி அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்ற அவர், பொதுமக்கள் தங்களது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்து, நேற்று பஷீர் என்பவர் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த வீடியோ வாட்ஸ் அப்களில் வெளியானது குறித்து பேசிய அவர் இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரி இடம் கருத்து கேட்கப்பட்டு இருப்பதாகவும் பொதுமக்களுக்கு பணப் பட்டுவாடா செய்தது உண்மை என விசாரணையில் நிரூபணமானால் வழக்கு பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.