சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் பாஜக சார்பில் போட்டியா..? நடிகை குஷ்பு அதிரடி விளக்கம்..!
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவேனா என்பது குறித்து பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த அலுவலகத்தை நடிகை குஷ்புவும், தமிழக பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டியும் திறந்து வைத்தனர். பின்னர் குஷ்பு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவதற்கு நான் இடம் எதுவும் கேட்கவில்லை. இத்தொகுதியின் பொறுப்பாளராக மட்டுமே நான் நியமிக்கப்பட்டிருக்கிறேன்.
தமிழகத்தில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பாஜக தேர்தல் பணியாற்றும். பிரபலமான முகங்களுக்குப் பதிலாக வெற்றி வாய்ப்பு இருப்பவர்களுக்கே சீட்டு வழங்குவது பாஜகவின் வழக்கம். எனவே, பாஜகவில் வகுக்கப்பட்ட நெறிமுறைகளின் படியே சீட்டு வழங்கப்படும். பாஜக வேட்பாளரை அறிவிக்க இன்னும் நேரம் உள்ளது. பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வைத் தடுக்க நரேந்திர மோடி அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்” என்று நடிகை குஷ்பு தெரிவித்தார்.