டாஸ்மாக் கடைகளை திறக்க தடைகோரிய வழக்கு.. சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனாவை தடுக்க ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மூன்றாம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகளை செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்தது. அதன்படி, மாநில அரசுகள் சில தளர்வுகளை செய்துள்ளன.
மேலும் ஒயின் ஷாப்புகளை திறக்கவும் மத்திய அரசு அனுமதியளித்தது. இதையடுத்து, நாடு முழுவதும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் மே 7(நாளை) முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது.
தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்ய டாஸ்மாக் கடைகளுக்கு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அதுமட்டுமல்லாமல் கூட்ட நெரிசலை தவிர்த்து தனிமனித இடைவெளியை உறுதி செய்யும் பொருட்டு, காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை 50 வயது மேற்பட்டவர்களும், மதியம் ஒரு மணி முதல் 3 மணி வரை 40-50 வயதுக்குட்பட்டவர்களும், மதியம் 3 மணி முதல் மாலை 5 மணிவரை 40 வயதுக்குட்பட்டவர்களும் மதுபானங்களை வாங்கலாம் என வயது வாரியாக மது வாங்க நேரம் ஒதுக்கியுள்ளது தமிழக அரசு.
ஆனால் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், டாஸ்மாக் கடைகளை திறக்க தடை கோரி திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுபானங்களை ஆன்லைனில் விற்க வாய்ப்புள்ளதா என்று அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியது. அதுகுறித்து பதிலளித்த தமிழக அரசு, ஆன்லைனில் மதுவை விற்பனை செய்ய முடியாது. ஆனால் அதேவேளையில் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தனிநபர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்பனை செய்யப்படும். மொத்த விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே தனிமனித இடைவெளியை பின்பற்றுவது தீவிரமாக கண்காணித்து உறுதி செய்யப்படும் என்று தமிழக அரசு பதிலளித்தது.
தமிழக அரசின் விளக்கத்தை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாட்டில் நாளை டாஸ்மாக் கடைகளை திறக்க தடையில்லை என்று உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளுக்கு செல்பவர்கள் தனிநபர் இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்கப்படும் என்ற தமிழக அரசின் விளக்கத்தை ஏற்று டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.