Chennai Egmore Court Warns TTV Dinakaran asked to appear in two Fera cases

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் டி.டி.வி.தினகரன் இன்று சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.


வெளிநாடுகளில் இருந்து ஜெ.ஜெ, தொலைக்காட்சி நிறுவனத்துக்கு அப்லிங்க் சாதனங்களை இறக்குமதி செய்ததில் அந்நிய செலாவணி மோசடி செய்ததாக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் மீது 1996-ம் ஆண்டில் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.


இதேபோல வெளிநாடு வாழ் இந்தியரான சுசீலா என்பவர் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் சென்னையை சேர்ந்த பரணி பீச் ரிசார்ட்ஸ் நிறுவனம் இந்தியன் வங்கியில் இருந்து, 3 கோடி ரூபாய் கடன் பெற்றது.
இதில் 2.20 கோடி ரூபாயை கொடநாடு எஸ்டேட் வாங்க சசிகலா பயன்படுத்தியதாகவும், இதில் அன்னிய செலாவணி விதிகள் மீறப்பட்டதாகவும் தினகரன்,சசிகலா மீது அமலாகத்துறை வழக்குப் பதிவு செய்தது.


உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கு விசாரணை, எழும்பூர் சென்னை இரண்டாவது பொருளாதார குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடைபெற்று வருகிறது. 
இந்த வழக்கு மீதான விசாரணை எழும்பூர் இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் வந்ததது. அப்போது டி.டி.வி.தினகரன் நேரில் ஆஜரானார். அவர் மீது இன்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கு மீதான விசாரணை வரும் 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.