சந்திரபாபு நாயுடுவின் ஊழல்கள் … ஒவ்வொன்றாக வெளிடுவேன்… ஜெகன் மோகன் ரெட்டி சபதம்!!
ஆந்திர மாநிலத்தில் கடந்த சந்திரபாபு நாயுடு ஆட்சியில் நடைபெற்ற பல ஊழல்களை வேளிக் கொண்டு வருவேன் என்றும் ஒரு முக்கியமான ஊழலில் சிக்கியுள்ளார் என்றும் முதலமைச்சராக பொறுப் பேற்க உள்ள ஜெகன் மோகன் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் அபார வெற்றி பெற்று முதல்முறையாக ஆட்சியை பிடித்து முதலமைச்சராக பொறுப்பேற்க போகும் ஜெகன்மோகன் ரெட்டி, மற்ற அரசியல்வாதிகள் போல் இல்லாமல் ஊழலுக்கு எதிராக அதிரடி நடவடிக்கையில் இறங்குவார் என அம்மால் மக்கள் நம்புகின்றனர்.
இது தொடர்பாக பேசிய ஜெகன் மோகன், சந்திரபாபு நாயுடுவின் பல திட்டங்களில் ஊழல் இருந்ததை தான் கண்டுபிடித்திருப்பதாகவும் குறிப்பாக தலைநகர் அமராவதி அமைக்கும் திட்டத்தில் சந்திரபாபு நாயுடுவும் அவரது பினாமி ரியல் எஸ்டேட்காரர்களும் செய்த ஊழலை அம்பலப்படுத்துவோம் என்று ஜெகன்மோகன் கூறியுள்ளார்.
அமராவதியில் தலைநகரை அமைக்க முடிவு செய்தவுடன் அந்த திட்டத்தை வெளிப்படுத்தாமல் சந்திரபாபு நாயுடு அந்த பகுதியில் ஏராளமான நிலங்களை பினாமி பெயரில் வாங்கி குவித்ததாகவும், தலைநகருக்காக நிலம் கையகப்படுத்தியபோது அந்த நிலங்கள் மட்டும் கையகப்படுத்தப்படவில்லை என்றும் ஜெகன்மோகன் ரெட்டி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சந்திரபாபு நாயுடுக்கும் தனக்கும் எந்தவித முன்விரோதங்களும் இல்லை என்றும், ஆனால் ஆந்திராவின் பாதுகாவலன் என்ற முறையில் நடந்த ஊழல்களை மக்களிடம் தெரிவிப்பது தனது கடமை என்றும் ஜெகன் தெரிவித்தார்.
முந்தைய அரசின் திட்டங்களில் ஊழல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் நிச்சயம் அந்த திட்டங்கள் ரத்து செய்யப்படும் என்றும் ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார்.