பச்சோந்தி ஸ்டாலின்.. வன்னியர் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று கூற தைரியம் இருக்கா..? ராமதாஸ் ஆவேசம்..!
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்ப்பதாகவும், அதை ரத்து செய்யப்போவதாகவும் வட தமிழகத்தில் கூறும் துணிச்சல் மு.க.ஸ்டாலினுக்கு உண்டா? என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேனியில் பிரசாரம் மேற்கொண்டு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு தேர்தலுக்கான நாடகம் என்று விமர்சித்தார். இதற்கு பதிலளித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஃபேஸ்புக்கில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “10 ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பை நெருங்க முடியாமல் விரக்தியின் விளிம்புக்கே சென்று விட்ட எதிர்க்கட்சிகள், எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதற்கு உதாரணமாக ஏதேதோ சதிகளை அரங்கேற்றுகின்றனர்; பொய்களை அருவியாக கட்டவிழ்த்து விடுகின்றனர்.
40 ஆண்டுகளாக போராடிப் பெற்ற வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டை ஆதரிக்கவோ, வரவேற்கவோ மனமில்லாமல், சட்டப்பேரவையில் வன்னியர் இட ஒதுக்கீட்டு மசோதா வாக்கெடுப்புக்கு வந்தபோது, அதில் பங்கேற்காமல் ஒட்டுமொத்தமாக புறக்கணித்த மு.க.ஸ்டாலின், தென் தமிழகத்திற்கு சென்று வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது நாடகம் என்றும், அதனால் சீர் மரபினர் பாதிக்கப்பட்டு இருப்பதால் இட ஒதுக்கீட்டு சட்டத்தை ரத்து செய்யப் போவதாகவும் பேசி இருக்கிறார்.
இதை விட பச்சை சந்தர்ப்பவாதம் எதுவும் இருக்க முடியாது. இடத்துக்கு இடம் நிறத்தை மாற்றிக் கொள்ளும் இனத்திற்கு பெயர் அரசியல் தலைவர் அல்ல, பச்சோந்தி. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்ப்பதாகவும், அதை ரத்து செய்யப்போவதாகவும் வட தமிழகத்தில் கூறும் துணிச்சல் மு.க.ஸ்டாலினுக்கு உண்டா? ஆட்சியைப் பிடிப்பதற்காக எந்த அளவுக்கும் கீழே இறங்கும் திமுகவின் சந்தர்ப்பவாதத்தை மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்; திமுகவுக்கு பாடம் கற்பிப்பார்கள்.” என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.