மத்திய அரசு பணிகளில் ஓபிசி பிரிவினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  

மத்திய அரசு பணிகளில் ஓபிசி பிரிவினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு பணிகளுக்கான பதவி உயர்வில் பட்டியலின, பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வசதியாக, ஒவ்வொரு துறையின் உயர் பதவிகளிலும் அவர்களின் எண்ணிக்கை குறித்த அளவிடக் கூடிய புள்ளிவிவரங்களைத் திரட்ட மத்திய அரசு ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதற்கான கணக்கெடுப்பு பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான விவரங்களைத் திரட்டவும் நீட்டிக்கப்பட வேண்டும். மத்திய அரசுப் பணிகளுக்கான பதவி உயர்வில் பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக 11 உயர்நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தான் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

அதே நேரத்தில் பற்றாக்குறை பிரதிநிதித்துவத்தின் அளவை அரசுகளே தீர்மானிக்கலாம் என்றும் ஆணையிட்டிருந்தது. அதனடிப்படையில், மத்திய அரசு பணிகளுக்கான பதவி உயர்வில் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்துள்ள மத்திய அரசு, ஒவ்வொரு துறையின் உயர்பதவிகளிலும் அவர்களின் பிரதிநிதித்துவம் எவ்வளவு குறைவாக உள்ளது என்பதற்கான புள்ளிவிவரங்களைத் திரட்டி தரும்படி அனைத்துத் துறைகளையும் கேட்டிருக்கிறது. அதே நேரத்தில், ஓபிசி வகுப்பினருக்கும் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக எழுப்பப்பட்டு வரும் கோரிக்கைகளை மத்திய அரசு புறம் தள்ள முடியாது. அரசுத் துறைகளின் உயர்பதவிகளில் போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்றால், பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாட்டை பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கும் நீட்டிக்கச் செய்வதில் எந்த சிக்கலும் இல்லை.

மத்திய அரசுப் பணிகளில் 27% ஓபிசி இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், அனைத்து நிலை பணிகளிலும் ஓபிசி பிரதிநிதித்துவம் அனுமதிக்கப்பட்டதற்கும் குறைவாக 16.50% என்ற அளவில் தான் இருக்கிறது எனும் போது, உயர் பதவிகளில் அவர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் சில பணிகளுக்கான பதவி உயர்வில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டு வந்த பதவி உயர்வை சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் ரத்து செய்து விட்டன. மத்திய, மாநில அரசு பணிகளுக்கான பதவி உயர்வில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமானால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்வது மட்டும் தான் ஒரே வழியாகும். அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்து ஓபிசிகளுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.