நீட் சர்ச்சையில் திடீர் திருப்பம்..! முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவிப்பு..
மார்ச் 12ம் தேதி நடைபெறுவதாக இருந்த நீட் முதுநிலை தேர்வை 8 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முதுநிலை மாணவர்களுக்கான 2022 ஆண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வு 6 முதல் 8 வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. நீட் 2021 கவுன்சலிங் தேதிகளுடம் தேர்வுத் தேதிகள் மோதுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ‘நீட் முதுநிலை தேர்வு 2022ஐ ஒத்திவைக்க வேண்டும் என்று மருத்துவர்களிடமிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வந்தன.
மார்ச் 12, 2022ல் முதுநிலை நீட் எழுத்துத் தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த தேதியில் முதுநிலை நீட் 2021 கவுன்சிலிங் அழைப்பும் விடுக்கப்பட்டிருந்தது. இதனால் தேர்வு தேதியை மாற்றும்படி கோரிக்கைகள் வாந்தன. இதனைக் கருத்தில் கொண்டு 6 முதல் 8 வாரங்களுக்கு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன’ என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரிய தமிழக அரசின் சட்ட மசோதாவை, திருப்பி அனுப்பியிருக்கிறார் ஆளுநர் ரவி. இதனால் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு, மேற்கு வங்கம் என பல்வேறு மாநிலங்கள் ‘நீட்’ தேர்வு விலக்கு வேண்டி போராடி வரும் நிலையில் மத்திய அரசு இவ்வாறு அறிவித்து இருப்பது ஒருவேளை இந்த பிரச்சனையின் காரணமாக இருக்குமோ ? என்று கேள்விகள் எழுந்து இருக்கிறது.