சென்னை ஐஐடியில் சாதிய பாகுபாடு.. தமிழக அரசு தலையிட வேண்டும்.. பெரியார் திராவிடர் கழகம் ஆவேசம்.
சென்னை ஐஐடி யில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து தனி ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என தந்தை பெரியார் திராவிடர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
சென்னை ஐஐடி யில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து தனி ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என தந்தை பெரியார் திராவிடர் கழகம் வலியுறுத்தியுள்ளது. சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் 50 க்கும் மேற்பட்டோர் சென்னை ஐஐடியில் நடைபெறும் தொடர் நிகழ்வுகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையில் பதாகைகளை, ஐஐடியில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் குமார், அனைத்து மக்களின் வரிப்பணத்தைத் தான் மத்திய அரசு பகிர்ந்து அளித்து வருகிறது என தெரிவித்த அவர், ஐஐடியில் மட்டும் தான் இட ஒதுக்கீடு இல்லை என்றார். ஐஐடியில் தொடர்ச்சியாக மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என தெரிவித்த அவர், இந்த ஐஐடியில் குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.
மாணவர்கள் தொடர்ச்சியாக உயிரிழந்து வருவது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது என கூறிய அவர், இதற்காக தமிழக அரசு தனி விசாரணை ஆணையம் அமைத்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். சாதிய பாகுபாடுகள் அதிகமாக இருக்கிறது என மாணவர்கள் பலரும் குற்றம்சாட்டி வருகின்ற நிலையில் தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.