தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா இல்ல விழாவில் பேசியது தொடர்பான அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். மற்ற நான்கு வழக்குகளின் விசாரணைக்கு தடை விதித்து, விசாரணையை ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மீதான குற்ற வழக்கையும், திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அமமுக பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் மீதான அவதூறு வழக்குகளையும் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

அன்புமணி.

வன்முறையை தூண்டும் விதமாகவும், கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசியதாக பாமக இளைஞரணி தலைவரும், எம்.பி.-யுமான அன்புமணி ராமதாஸ் மீது பிரம்மதேசம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அன்புமணி தாக்கல் செய்த வழக்கு தொடர்ந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அன்புமணியின் பேச்சு குறித்துத்தான் காவல்துறை வழக்கு பதிந்துள்ளதாகவும், அதை ஆராய்ந்து நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டுமென அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர், அன்புமணிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

TTV தினகரன்.

தமிழக அமைச்சர்களை விமர்சித்த விவகாரத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் தொடர்ந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கு விசாரணைக்கு பிறகு அமைச்சர்கள் மீதான கருத்து பொதுப்படையாகத்தான் உள்ளதே தவிர, அரசு பணிகளை செய்வதற்கு இடையூறாக இல்லை என கூறி, தினகரனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளார்.

மு.க ஸ்டாலின்.

முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறித்தும், அரசு மற்றும் காவல்துறை செயல்பாடுகள் குறித்தும் உண்மைக்கு புறம்பாக கூறியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசின் சார்பில் தொடர்ந்த 5 அவதூறு வழக்குகள் நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. அவற்றில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா இல்ல விழாவில் பேசியது தொடர்பான அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். மற்ற நான்கு வழக்குகளின் விசாரணைக்கு தடை விதித்து, விசாரணையை ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

இந்த வழக்குகளின் விசாரணையின்போது, அன்புமணி ராமதாஸ் தரப்பில் வழக்கறிஞர் ஜோதிமணியன், டிடிவி.தினகரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், மு.க.ஸ்டாலின் தரப்பில் குமரேசன் ஆகியோரும், அரசு மற்றும் காவல்துறை தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆகியோரும் ஆஜராகி வாதிட்டனர். என்பது குறிப்பிடதக்கது.