இந்து பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து... திருமாவளவன் மீது பாய்ந்தது வழக்கு..!
பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதி செய்துள்ளனர்.
மனுஸ்மிருதி இந்து பெண்கள் அனைவரையுமே விபச்சாரிகள் என்று குறிப்பிடுகிறது என்று யூடியூப் சேனல் ஒன்றுக்கு திருமாவளவன் பேட்டி அளித்திருந்தார். பெண்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் திருமாவளவன் அவதூறாகவும், சர்ச்சையான கருத்துகளைக் குறிப்பிட்டதாகவும் பேசியதாகவும் புகார் எழுந்தது. இந்தப் பேட்டி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக சார்பில் பல்வேறு பகுதிகளில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் திருமாவளவன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருமாவளவன் மீது மதங்களை மையப்படுத்தி குற்றத்தில் ஈடுபடுதல், கலகம் செய்ய தூண்டுதல், சாதி, மதம், இன மொழி தொடர்பாக விரோத உணர்ச்சிகளை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.