#Breaking : AIADMK : அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு… நாளை விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்!!
அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நாளை விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நாளை விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுகவில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல், நாளை நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல், கடந்த 3 ஆம் தேதி தொடங்கிய நிலையில், 252 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பெயரில் தான் அதிகமான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் இன்று நிறைவடைந்த நிலையில், ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் போட்டியின்றி தேர்வாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்குத் தடை விதிக்க கோரி, சில நாட்களுக்கு முன் முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து இருந்தது. இந்நிலையில், அதிமுக உறுப்பினரான ஜெயச்சந்திரன் சார்பில் அவசர முறையீடு செய்யப்பட்டது. இதை அடுத்து மனு தாக்கல் செய்யாமல் வழக்கை எப்படி விசாரிப்பது என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.
இதை அடுத்து மனு தாக்கல் செயப்பட்டுள்ளதாகவும் இந்த வழக்கை வழக்கு பட்டியலின் இறுதியில் எடுக்க வேண்டும் என்றும் ஜெயச்சந்திரன் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் நீதிபதிகள் வழக்கு பட்டியலில் தொடர்ந்து வழக்குகள் இருப்பதால் இன்று வழக்கை விசாரிக்க சாத்தியமில்லை என்றும் மனு தாக்கல் செய்யப்பட்ட பிறகு ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த விவரங்களுடன் கூடுதல் மனு தாக்கல் செய்யுமாறும் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கை நாளை விசாரிப்பதாகவும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.