cartoonist bala gets bail

கந்துவட்டி கொடுமை தொடர்பாக கேலிச்சித்திரம் வரைந்ததற்காக கைதுசெய்யப்பட்ட கார்ட்டூனிஸ்ட் பாலாவிற்கு நெல்லை மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கந்துவட்டி கொடுமை காரணமாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இசக்கிமுத்து என்பவர் தனது குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கந்துவட்டி கொடுமை தொடர்பாக இசக்கிமுத்து பலமுறை புகார் அளித்தும் காவல்துறையும் மாவட்ட ஆட்சியரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால்தான் இசக்கிமுத்து குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டதாக புகார் எழுந்தது. ஆனால் அதை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் மறுத்தனர்.

இந்நிலையில், கந்துவட்டி கொடுமை தொடர்பாக முதல்வர் பழனிசாமி, நெல்லை மாவட்ட ஆட்சியர், நெல்லை மாநகர ஆணையர் ஆகியோரை வைத்து கேலிச்சித்திரம் ஒன்றை கார்ட்டூனிஸ்ட் பாலா வரைந்திருந்தார். முதல்வர் மற்றும் ஆட்சியர் ஆகியோர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் கேலிச்சித்திரம் வரைந்ததாகக் கூறி நெல்லை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் கார்ட்டூனிஸ்ட் பாலா சென்னையில் கைது செய்யப்பட்டார். இதற்கு பத்திரிகையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இதையடுத்து நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் பாலா இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, பாலாவிற்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.