சில தினங்களுக்கு முன் தலைமைக் கழகத்தில் நேரில் சந்தித்த அவரது முகம் இன்னமும் நெஞ்சில் நிழலாடிக் கொண்டிருக்கிறது. கௌதம் சாகர் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் கழக உடன்பிறப்புகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் கௌதம் சாகர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவத்திற்கு அக்கட்சியில் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். 

விழுப்புரம் வடக்கு மாவட்ட அமமுக கழக செயலாளராக கௌதம் சாகர் இருந்து வந்தார். இவர் நேற்று இரவு செஞ்சி வள்ளி அண்ணாமலை திருமண மண்டபத்திற்கு வரவேற்பு வருகை தந்திருந்தார். அப்போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து, கட்சி நிர்வாகிகள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனைக்கேட்டு அம்மாவட்ட தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இவரது மறைவுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் அன்பு சகோதரர் .A.கௌதம் சாகர் திடீரென மாரடைப்பால் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன். கழகத்தின் மீது மிகுந்த பற்று கொண்ட அவரது மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு பெரும் இழப்பாகும்.

சில தினங்களுக்கு முன் தலைமைக் கழகத்தில் நேரில் சந்தித்த அவரது முகம் இன்னமும் நெஞ்சில் நிழலாடிக் கொண்டிருக்கிறது. கௌதம் சாகர் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் கழக உடன்பிறப்புகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.