#BREAKING 11ம் வகுப்புக்கான நுழைவுத்தேர்வு ரத்து.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!
11ம் வகுப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு பல்வேறு தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
11ம் வகுப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு பல்வேறு தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதுபோன்று 12ம் வகுப்புத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு எப்படி மதிப்பெண் வழங்கப்படும், உயர்கல்வியில் சேரும்போது இவர்கள் என்னென்ன சிக்கலை எதிர் கொள்வார்கள் என்ற கேள்விகளும் விவாதங்களும் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்த சூழலில் தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில்;- அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களை விடக் கூடுதலாக மாணவர்களைச் சேர்க்கலாம். அதன்படி ஒரு பாடப்பிரிவுக்கு அனுமதிக்கப்பட்ட இடங்களை விட அதிகமானவர்கள் விண்ணப்பித்தால் அவர்களுக்கு நுழைவுத் தேர்வைச் சம்பந்தப்பட்ட பள்ளி அளவில் நடத்தி மாணவர்களைத் தேர்ந்தெடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், 11ம் வகுப்புக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 10ம் வகுப்பு பாடத்தின் அடிப்படையில் தேர்வு எதுவும் நடத்த தேவையில்லை. 9ம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு மாணவர்கள் விருப்பத்தின் படி பிரிவுகளை ஒதுக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 11ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசின் வழிகாட்டுதல்படி ஜூன் 3வது வாரத்தில் வகுப்புகளைத் தொடங்கலாம். 11ம் வகுப்பில் ஒவ்வொரு பிரிவிலும் 10 முதல் 15 சதவீத கூடுதல் மாணவர்களை சேர்க்கலாம் என பள்ளிக்கல்வித்துறை ஆணையம் தெரிவித்துள்ளார்.