பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதித்த தடையை திரும்ப பெற வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதித்த தடையை திரும்ப பெற வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தின் 27 ஆவது ஆதீனகர்த்தராக பதவியேற்ற ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வெள்ளிப் பல்லக்கில் அமரந்து வீதி உலா வந்தார். அந்த பல்லக்கை ஆதீனத்தில் உள்ள அடிதட்டு மக்கள் சுமந்து வந்தனர். இந்த நிகழ்வை தொடர்ந்து டிசம்பர் 24 ஆம் தேதி தருமை ஆதீனத்திற்கு சொந்தமான வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாதசுவாமி கோயிலுக்கு சென்றவரை, அங்கும் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு, வெள்ளி பல்லக்கில் அமரசெய்து பட்டினப் பிரவேசம் செய்யவைத்தனர். அதே போலவே காரைக்கால் திருநள்ளார் சனிபகவான் கோயிலிலும் நடைபெற்றது. இதற்கு திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் தருமபுரம் ஆதீனம் குருமகாசன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கி செல்வதற்கு தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கு பாஜக, பாமக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்த நிலையில் தர்மபுரம் ஆதீனம் மடத்தில் பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை திரும்ப பெற வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தர்மபுரம் ஆதீனம் மடத்தில் பட்டின பிரவேசம் என்பது 500 ஆண்டுகாலம் பாரம்பரியமாக நடக்கும் நிகழ்வு ஆகும். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்து தற்போது வரை இந்த நடைமுறை தொடர்வதாகவும், தற்போது பட்டினப்பிரவேசம் நிகழ்வுக்கு தமிழக அரசு தடை விதித்திருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு மனிதனை இன்னொரு மனிதன் சுமப்பது மனித மாண்புக்கே எதிரானது என சிலர் கூறி வருகின்றனர்.

இன்றைய காலகட்டத்தில் திருமண விழாக்களில் மணமக்களை பல்லக்கில் சுமப்பது என்பது அனைவராலும் கடைப்பிடிக்க கூடிய கலாச்சாரமாகவே மாறியுள்ளது. மேலும், திருவிழாக்களில் சாமி சிலைகளை தோளில் சுமந்து செல்லும் போதும் ஒரு சிலர், சாமி சிலைகளுக்கு அருகில் அமர்ந்து இருப்பது அனைவரும் அறிந்ததே. நாட்டில் வேலை வாய்ப்பின்மை, மின்சார தட்டுப்பாடு, லஞ்சம், ஊழல், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இருக்கும் பொழுது, அரசு அதில் கவனம் செலுத்தாமல், மக்களை திசை திருப்புவதாகவே இந்த பிரச்சனை பார்க்கப்படுகிறது. காமாலை கண்களோடு பார்த்தால் காண்பதெல்லாம் மஞ்சலாகத்தான் தெரியும் என்ற பழமொழிதான் ஞாபகத்திற்கு வருகிறது. எனவே பாரம்பரியமாக நடக்கும் பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
