இன்னும் சற்று நேரத்தில் பரபரப்பு... #ExitPolls-ஐ நம்பலாமா..? 2016 ஒரு ஃப்ளாஷ்பேக்..!
கருத்துக்கணிப்புகள் எதைக்கூறினாலும், யார் அடுத்த 5 ஆண்டுக்கான முதல்வர், எந்த கட்சி மக்களை ஆளப்போகிறது, மக்களின் ஆதரவு யாருக்கு என்பது தேர்தல் அன்றே இறுதியாகும் என்பதே நிதர்சனமான உண்மை.
தமிழகம், கேரளா, அஸ்ஸாம், புதுச்சேரி, மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடந்துகொண்டிருந்த சட்டமன்ற தேர்தல் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இதைத்தொடர்ந்து தேர்தல் விதிகள் அமலில் இருந்து நீக்கப்படவுள்ளது. இதனால் குஷியாகியுள்ள பல்வேறு கட்சியினர் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்காக ஆவலுடன் எதிர்நோக்கிக்கொண்டிருக்கின்றனர்.
தமிழகத்தில் 2021ம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் கடந்த 6ம் தேதி நடந்து முடிந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை வருகிற மே.2ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கு இன்னும் இரு தினங்களே உள்ளது. இதனால் கிளைமேக்ஸ் நேரம் நெருங்கிக்கொண்டிருப்பதாக அனைத்து கட்சியினரும் பரபரப்பு அடைந்துள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியா அல்லது திமுக தலைவரா என்ற எதிர்ப்பார்ப்பில் மக்களும் உள்ளனர்.
ஏற்கனவே தேர்தல் முடிந்த பின் உற்சாகத்தில் இருந்த திமுகவுக்கு, மீண்டும் ஒரு தித்திப்பு செய்தி ரிப்போர்ட் வாயிலாக பறந்துள்ளது. அதில், லோக்கல் சேனல் முதல் நேஷனல் சேனல் வரை நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில், திமுக தான் லிஸ்டின் டாப்பில் இடம்பெற்றுள்ளதாம். இவர்கள் தான் நாளைய தலையங்கத்தை அலங்கரிக்க உள்ளனராம். இவை இன்று இரவு ஏழரை மணிக்கு வெளியாகும் எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பில் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.
றெக்கை கட்டியபடி தமிழக ஊடகங்களும் எக்ஸீட் போல் ரிப்போர்ட் வெளியிட தயாராகி உள்ளன. ரிசல்ட் பெரும்பாலும் திமுகவுக்கு தான் சாதகம் என சொல்வதாக, ஸ்டாலினுக்கு கிடைத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த முடிவு ஏற்கனவே எதிர்பார்த்தது தான் என்றாலும், இது ஸ்டாலினுக்கு மீண்டும் ஒரு ‘பூஸ்ட்’ குடித்தது போன்ற உற்சாகத்தை அளித்துள்ளது.
திமுக தான் அடுத்த ஆட்சி என பெரும்பாலான ஊடகங்கள் கணித்தாலும், சீட் ஷேரிங்கில் முரண்பாடு நீடிப்பதாக கூறப்படுகிறது. அதன்படி திமுக 180 இடங்கள் வரை கைப்பற்ற வாய்ப்பிருப்பதாக சில ஊடக கணிப்புகள் தெரிவிக்கின்றன. அப்படி கிடைத்தால் அது ஸ்டாலினுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் சில ஊடகங்கள் அதிமுக – திமுக சீட்களில் பெரிய அளவு வித்தியாசம் இருக்காது எனவும் சொல்கின்றன.
எது எப்படியோ பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் அளித்த எக்ஸீட் போலில் குறிப்பிட்டபடி 200+ சீட்டுக்கு ஸ்டாலின் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றாராம். திமுக கூட்டணி 200க்கு மேற்பட்ட தொகுதிகளை வென்றது 1971ம் ஆண்டு கருணாநிதி ஆட்சியில் தான்.. தற்போது, கலைஞர் இல்லாத திமுகவில், ஸ்டாலினுக்கு அப்படியொரு வெற்றி கிடைக்கும் என்று ‘ஐபேக்’ ரிசல்ட் சொல்கிறதாம்..
இது ஒருபக்கம் இருந்தாலும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை ஒரேயடியாக நம்ப முடியாது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளில், `இந்தியா டுடே- ஆக்ஸிஸ்’ அதிமுகவுக்கு 89 – 101 இடங்களும், திமுக கூட்டணிக்கு 124 – 140 இடங்களும் கிடைக்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்தன. ஆனால் டைம்ஸ் நவ் – சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் அதிமுகவுக்கு 139 இடங்களும், திமுக கூட்டணிக்கு 78 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 17 இடங்களும் கிடைக்கும் என்று கூறப்பட்டது.இறுதியில் அதிமுக 134 இடங்களையும், திமுக கூட்டணி 98 இடங்களையும் பிடித்திருந்தன.
கருத்துக்கணிப்புகள் எதைக்கூறினாலும், யார் அடுத்த 5 ஆண்டுக்கான முதல்வர், எந்த கட்சி மக்களை ஆளப்போகிறது, மக்களின் ஆதரவு யாருக்கு என்பது தேர்தல் அன்றே இறுதியாகும் என்பதே நிதர்சனமான உண்மை.