புகாருக்கு ஆளான ஆளுநரே விசாரணைக்கு உத்தரவிடலாமா? - மா.சுப்பிரமணியன் கேள்வி
பெண் பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், ஆளுநரே விசாரணைக் கமிஷன் அமைக்க முடியுமா? என்று மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலல் புரோகித்துக்கு எதிராக, திமுக சார்பில் சைதாப்பேட்டையில் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணி, முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. பேரணியின்போது ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின்போது, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, மத்திய அரசு திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் பதாகைகளை கைகளில் ஏந்தியும் போராட்டம் நடத்தப்பட்டது.
ஆளுநர் மாளிகை நோக்கி திமுகவினர் பேரணியாக செல்ல முயன்றனர். ஆனால், ஆளுநர் மாளிகை நோக்கி செல்ல விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது, ஆளுநருக்கு எதிராக போராட்டக்காரர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழகத்தின் சட்ட விதிமுறைகளை மீறுவதும், மாநில
சுயாட்சிக்கு எதிரான பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறார். அவரது அதிகார வரம்பை பல்வேறு நடவடிக்கைகள் மூலம் ஈடுபட்டு வருகிறார்.
தமிழகத்தின் கல்லூரி பெண் பேராசிரியர் ஒருவர் உங்களுக்கு பணம் பெற்றுத் தருகிறேன், உயர் அதிகாரிகளிடம் அட்ஜெஸ்ட் செய்யுங்கள் என்று பாலியல் பேரம் பேசிய கொடுமை நடந்துள்ளது.
இந்த சூழலில் குற்றம் சாட்டப்பபட்டுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தான் ஒரு விசாரணைக் குழுவை நியமித்துள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுக்கு அவரே விசாரணைக் குழுவை அமைத்துள்ளார். இது எப்படி சாத்தியமாகும்? என்று கேள்வி எழுப்பினார்.
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடவடிக்கை தேவையில்லை என்று ஆளுநர் கூறுகிறார். மடியில் கனமுள்ளது அதனால் சிபிஐ
விசாரணை தேவையில்லை என்கிறார். ஆளுநர் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது, பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை. பெண் செய்தியாளர் ஒருவரின் கன்னத்தை வருடிக் கொடுத்துள்ளார். இது கண்டிக்கத்தக்கது என்றார்.
இப்படி ஒரு ஆளுநர் தமிழகத்துக்கு தேவையில்லை. ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, மத்திய மோடி அரசு திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அது தொடர்பாக விரைவில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற உள்ளதாகவும் மா.சுப்பிரமணியன் கூறினார்.