கடலூர் அதிமுக கோஷ்டி பூசல்... கொரொனா நிவாரணப் பணியின் போட்டியால் 2பேர் வெட்டி கொலை.!!
T.Balamurukan
பண்ருட்டி அருகே பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் கொடுப்பதில், அதிமுகவின் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருதரப்பைச் சேர்ந்த இரண்டு பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொலையாளிகள் 15 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம். பண்ருட்டி அருகே திருவதிகை கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கும் அதிமுகவின் மற்றொரு தரப்பினருக்கும் இடையே கோஷ்டி பூசல் ஏற்பட்டது. இதையடுத்து இரு தரப்பும் பயங்கர ஆயுதங்களை கொண்டு மோதி கொண்டுள்ளனர். இது தொடர்பாக இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் மணிகண்டன் கடந்த சில நாட்களாக திருவதிகை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை வழங்கி வந்ததாக கூறப்படுகிறது.
அந்த பகுதியில் வீதி, வீதியாக கிருமி நாசினி தெளிக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இது எதிர் தரப்பினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்களை நோட்டமிட்ட எதிர் தரப்பினர், பயங்கர ஆயுதங்களை கொண்டு அவர்களை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மணிகண்டனின் நண்பர் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.