2028ல் எல்லா குஜராத்தியர்களுக்கும் நிலவுல வீடு கிடைச்சிடும்! : மோடியை கிண்டல் செய்யும் ராகுல்!
வரும் 2025 ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தில் உள்ள ஒவ்வொருவரையும் ராக்கெட் மூலம் நிலவுக்குக் கூட்டிச் செல்வார் என்று கூறியுள்ளார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி.
மோடியை கிண்டலடித்த ராகுல் காந்தி, மோடியின் வெகு அழகான வாக்குறுதிகளைக் குறிப்பிட்டு, வரும் 2030 ஆம் ஆண்டில், அந்த நிலவையே பூமிக்குக் கொண்டு வந்துவிடுவார் மோடி என்று நக்கல் அடித்துள்ளார்.
குஜராத்தில் சுற்றுப் பயணம் செய்து வரும் ராகுல், நேற்று ஒரு பேரணியில் பங்கேற்றார். அப்போது, வரும் 2028ல் குஜராத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் நிலவிலே வீடு கட்டிக் கொடுத்துவிடுவார் மோடி, அடுத்து 2030ல் அந்த நிலவையே பூமிக்குக் கொண்டு வந்து விடுவார் என்று பேசினார்.
கடந்த 22 வருடங்களாக குஜராத்தில் பாஜக., ஆட்சி செய்து வருகிறது. ஆனால், இந்த 22 வருடங்களாக உங்கள் கட்சியால் குஜராத்தில் ஏழ்மையைப் போக்க முடியவில்லை. இப்போதும் நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் 2022ல் மாநிலத்தில் வறுமையை முற்றிலும் அகற்றி விடுவோம் என்று...! நான் இப்போது சொல்கிறேன், நன்றாகக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்... வரும் 2025ஆம் ஆண்டில் குஜராத்தில் உள்ள ஒவ்வொருவரையும் ராக்கெட் மூலம் அந்த நிலவுக்கே அழைத்துச் செல்வார் மோடி.” என்று கிண்டல் செய்தார் ராகுல் காந்தி.
முன்னதாக, ராகுல் இப்படி மோடியை கிண்டல் செய்து பிரசாரம் செய்துவிட்டுச் சென்றபோதும், இரு தினங்களுக்கு முன் வெளியான பஞ்சாயத்து இடைத்தேர்தல்களில் பாஜக.,வே பெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.