பஸ் ஸ்டிரைக்கால் மிடில் கிளாஸ் பாதிக்கப்படவில்லை: புண்ணை வாங்கிக் கட்டும் பொன்னார்!
தமிழகத்தில் நடந்து வரும் போக்குவரத்து துறை வேலை நிறுத்தத்தால் மக்கள் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ரெகுலராக பேருந்துக்களில் பயணிக்கும் நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களுக்கு இது மிகப் பெரிய தலைவலியாக அமைந்திருக்கிறது.
இதுதான் வாய்ப்பு என்று கட்டணத்தை கன்னாபின்னாவென உயர்த்தி தனியார் பேருந்துகள் மட்டுமில்லாது அரசு பேருந்துகளும் கொள்ளையடித்து மக்களை துன்புறுத்தி வருகின்றனர். பண இழப்பு மட்டுமில்லாது பாதுகாப்பற்ற பயணத்தால் மக்களின் உயிர் மற்றும் உடமைக்கும் பெரிதும் அச்சுறுத்தல் நிலவுகிறது. தற்காலிக ஓட்டுநர்கள் ஓட்டும் பல பேருந்துகள் தமிழகத்தில் பல இடங்களில் விபத்தை சந்தித்துக் கொண்டிருக்கின்றன.
இந்த சூழ்நிலையில் இன்று சமூக வலைதளங்களில் மத்தியமைச்சர் பொன்ராதாகிருஷ்ணனை வைத்து வாங்கு வாங்கென வாங்கிக் கொண்டிருக்கின்றனர் சமூக வலைதள போராளிகள். பஸ் ஸ்டிரைக்குக்கும், மத்தியமைச்சருக்கும் என்ன தொடர்பு? என்று யோசித்தபடி அவற்றை வாசித்துப் பார்த்தால்தான் விவகாரம் விளங்குகிறது.
அதாவது பஸ் ஸ்டிரைக் பற்றி இன்று பேட்டி கொடுத்த பொன்னார் “இந்த ஸ்டிரைக் மிகவும் அவதியான ஒன்று. இந்த வேலை நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்கள் ஒன்றும் பாதிக்கப்படவில்லை. ஆமாம் மிடில் கிளாஸ் ஒன்றும் பாதிக்கப்படவில்லை, ஆனால் ஏழை எளிய மக்கள்தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.” என்று பேட்டியளித்துள்ளார் என்று சொல்லி விமர்சனம் செய்துள்ளனர் சமூக வலைதளத்தில் விமர்சனம் செய்வோர்.
“மிடில் கிளாஸ்னா கோடி கோடியா சம்பாதிச்சு வெச்சிருக்கிறவன்னு நினைச்சுட்டு இருக்கிறாரு போல மினிஸ்டர். மிடில் கிளாஸ்னா கார்லேயும், ஃபிளைட்டுலேயும் பறப்பாங்கன்னு கனவு கண்டுகிட்டு இருக்கார் போல பொன்னார். நாலு காசு சேர்த்து வெச்சு அப்பர் மிடில் கிளாஸா இருந்தவன் கூட நீங்க பண்ணுன பண மதிப்பிழப்பு நடவடிக்கையால பிச்சைக்காரனாகி போயி கிடக்குறானே! இந்த நிலையில மிடில் கிளாஸ்காரன் ஒண்ணும் பஸ் ஸ்டிரைக்கால பாதிக்கப்படலைன்னு நக்கலா சொல்லி சிரிக்கிறீங்களே!
பஸ் ஸ்டாண்டுக்கு வந்து பாருங்க பொன்னார், யாரு மிடில் கிளாஸ், யாரு பணக்காரன்னு புரியும்! கவருமெண்டு செலவுல ஃபிளைட்டுலேயே பறந்தா இந்த உண்மையெல்லாம் எப்படி புரியும்?” என்று பொளந்து கட்டியுள்ளனர்.
ஆக மொத்தத்தில் புண்ணை வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்டுள்ளாரா பொன்னார்?