"ரூ. 500 கோடி போதாது ; திட்டமிட்டபடி பஸ் ஸ்ட்ரைக் நடக்கும்" - போக்குவரத்து தொழிலாளர்கள் உறுதி
தமிழக அரசு தருவதாக கூறிய ரூ.500 கோடி போதாது எனவும் திட்டமிட்டபடி மே 15 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம் நடைபெறும் எனவும் போக்குவரத்து தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
13 வது ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்து கழக ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆனால் தமிழக அரசு இவர்களின் கோரிக்கையை ஏற்க முன்வராமல் இருந்தது.இதைதொடர்ந்து போக்குவத்து தொழிலாளர்கள் மே 15 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டனர்.
இதனால் போக்குவத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொழிலாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தைக்கு பின் போக்குவத்து தொழிலாளர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது அவர்கள் கூறியதாவது :
தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட வில்லை. அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை.
இந்த மாதம் பென்சன் இதுவரை கிடைக்கவில்லை. 10 ஆம் தேதி கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கொடுக்கும் 500 கோடி ரூபாய் நிலுவை தொகை எங்களுக்கு போதாது. 250 கோடி அரியர்ஸ் இருக்கிறது.2000 கோடி பக்கமாக தமிழக அரசு தரவேண்டிய பணம் நிலுவையில் உள்ளது.
உடனடியாக தரவேண்டிய 2000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும்.போக்குவரத்து தொழிலாளருக்கு அரசு 250 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது.
போக்குவரத்து கழகங்களுக்கு உடனடியாக 6000 பேருந்துகள் புதிதாக வழங்க வேண்டும்.22,000 அரசு பேருந்துகளில் 17, 000 பேருந்துகள் இயக்க தகுதி இல்லாதவை.
வேலை நிறுத்த போராட்டத்தை திரும்ப பெற எந்த முகாந்திரமும் இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.