இன்று 6 ஆவது நாளாக தொடரும் பஸ் ஸ்ட்ரைக் !! திண்டாட்டத்தில் பயணிகள், பள்ளி மாணவர்கள் !!
தமிழகத்தில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று 6 ஆவது நாளாக நீடிப்பதால் பயணிகளும் , பள்ளிமாணவர்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
ஊதிய உயர்வு பிரச்சினை தொடர்பாக கடந்த 4-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு விளக்கம் கேட்டு போக்குவரத்துத்துறை தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பிய பின்னரும், தொழிற்சங்கங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. உரிய முடிவு கிடைக்கும் வரையிலும் போராட்டத்தை தொய்வு இல்லாமல் நடத்துவோம் என்று தொழிற்சங்கங்கள் திட்டவட்டமாக அறிவித்து உள்ளன.
இந்த வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து வருவதால் சென்னை கோயம்பேடு, தியாகராயநகர், திருமங்கலம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பணிமனைகளில் இருந்து குறைவான பஸ்களே இயக்கப்பட்டன.
பேருந்துகள் முழுமையாக இயக்கப்படாததால் மெட்ரோ ரெயில் மற்றும் மின்சார ரெயில்களை போக்குவரத்து தேவைக்காக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மெட்ரோ-மின்சார ரெயில் நிலையங்களில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதேபோல கால் டாக்சிகள், ஷேர்-ஆட்டோக்கள் மற்றும் ஆட்டோக்களில் பொது மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சில ஆட்டோ டிரைவர்கள் நிர்ணயிக்கப்பட்டதை விடவும், அதிக கட்டணம் வசூலித்ததாக பயணிகள் சிலர் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று 6 ஆவது நாளாக போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை முதலே தமிழகம் முழுவதும் மிகக் குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் வேலைக்கு செல்பவர்களும், மாணவ-மாணவிகளும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.