‘படுவேகமாக பட்ஜெட் வாசித்து சிரிப்பலை உண்டாக்கிய’ நிதி அமைச்சர் ஜெயக்குமார்
2017-18ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஜெயக்குமார் படுவேகமாக யாருக்கும் புரியாத வகையில் வாசித்ததால், அவையில் எம்.எல்.ஏ.க்கள் பலர் சிரித்தனர், சில் என்ன படிக்கிறார் என்பதே தெரியாமல் முழித்தனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு தனது முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தது. நிதி அமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அப்போது தி.மு.க உறுப்பினர்கள் கூச்சலும், கோஷமும் எழுப்பியதால் கூடுதல் சலசலப்பு ஏற்பட்டது. இருந்தபோதிலும், அதை பொருட்படுத்தாமல் அவையில் அவர் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஏறக்குறைய 2 மணிநேரம் பட்ஜெட் உரையை அவர் வாசித்தார்
.தி.மு.க.வினரில் அமளியால் அவையில் ஒரு விதமான குழப்பமான சூழல் நிலவியது. அதைச் சமாளிக்கும் வகையில், பட்ஜெட் உரையை திடீரென நிதி அமைச்சர் ஜெயக்குமார் அதி வேகமாக வாசித்தார்.
சட்டசபையில் அமர்ந்திருந்த எம்.எல்.ஏக்களும், டி.வி. மூலம் பட்ஜெட் உரையை பார்த்துக் கொண்டிருந்த மக்களும், பேரவையில் இருந்த பத்திரிகையாளர்களும் கூட சற்று திகைத்துப் போயினர்.
அதன்பின் அருகில் இருந்த முதல்வவிடம் பட்ஜெட் உரையை பிறகு இப்படி வேகமா வாசிக்கவா? அல்லது மெதுவாக வாசிக்கவா? என்று அமைச்சர் ஜெயக்குமார் கேட்டார். அதற்கு சில அதிமுக உறுப்பினர்கள் வேகமாக வாசியுங்கள் என்றும், பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மெதுவாக வாசியுங்கள் என்றும் கூறினர்.
இதைக் கேட்ட ஜெயக்குமார், பட்ஜெட்டை கேட்கும் உறுப்பினர்களுக்கு சற்று சுவாரஸ்யம் உண்டாக்கவே இவ்வாறு வேகமாக படித்து, நகைச்சுவை உண்டாக்கினேன் என்றார்.
இதனால் கூச்சலும் குழப்பமும் நிலவிய பேரவையில் சிரிப்பலையும் உண்டானது. அதன்பின் எப்போதும் போல், பட்ஜெட்டை தெளிவாகவும், மெதுவாகவும் மீண்டும் வாசிக்கத் தொடங்கினார்.