#BREAKING: மீண்டும் தொடங்கிய ஆட்டம்.. விஜயபாஸ்கர் குவித்த சொத்துக்கள்.. லிஸ்ட் போட்ட லஞ்ச ஒழிப்புத் துறை!
சொத்து வாங்கி குவித்ததாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பிறகு, அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்து குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸார் விசாராணையைத் தொடங்கினர். அதன்படி எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி ஆகிய முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. அவர்கள் வீட்டிலும், அவர்களுக்கு சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடியாக சோதனை நடத்தியது.
இந்நிலையில் முன்னாள் சுகாதார துறை அமைச்சரும் தற்போதைய விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ.வுமான விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளானர். அதுதொடர்பான எப்.ஐ.ஆரில், விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக 27.22 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்தபோது ரூ.53 லட்சத்துக்கு பி.எம்.டபுள்யு கார், ரூ.40 லட்சம் மதிப்பிலான 85 சவரன் நகைகள் வாங்கியதாக எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விஜயபாஸ்கர் மீது மட்டுமல்லாமல், அவருடைய மனைவி ரம்யா மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எப்.ஐ.ஆரில் மனைவி, மகள்கள் மீது விஜயபாஸ்கர் சொத்து வாங்கி குவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் புகாரின்போரில் விஜயபாஸ்கர் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டுகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.